காதலிக்க மறுத்தால் கொன்றுவிடுவேன்.. கல்லூரி மாணவியை மிரட்டிய கொத்தனார் கைது
கன்னியாகுமரி: தன்னை காதலிக்க மறுத்த மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கொத்தனாரை போலீசார் அதிரடியாக போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், களியாக்காவிளை அருகே உள்ள மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் தாமஸ். இவரது மகள் நாகர்கோவிலில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் பிஇ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த மாணவியை திருவத்துவபுரம் ஆயக்குடி பகுதியை சேர்ந்த கொத்தனார் ஜெஸ்டின்ராஜ் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தார். மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மாணவி பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை.
இந்நிலையில் மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த அவரை வழி மறித்த ஜெஸ்டின்ராஜ் அவரது செல்போன் எண்ணை கேட்டு தகராறு செய்துள்ளார்.
மேலும் கையை பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவி தனது பெற்றோர்க்கு தகவல் தெரிவித்தார். பின்னர் உடனடியாக களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஜெஸ்டின் ராஜை கைது செய்தனர்.
ஜெஸ்டின்ராஜ் மீது ஏற்கனவே அந்த மாணவியின் பெற்றோர் இரண்டு தடவை புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சுவாதி கொலை சம்பவத்திற்கு பிறகு அலர்ட் ஆகியுள்ள போலீசார் இப்போது துரிதமாக நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.