மணல் குவாரிகள் மூடல் எதிரொலி- முடங்கியது கட்டுமானப்பணிகள்
தமிழகம் முழுக்க இரண்டாவது நாளாக 10 முக்கிய மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் கட்டுமானப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் சில வாரங்களில் கட்டுமானத் தொழிலில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்படும் என்க
சென்னை: தமிழகம் முழுக்க இரண்டாவது நாளாக 10 முக்கிய மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் சில வாரங்களில் கட்டுமானத் தொழிலில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்படும் என்கிறார்கள் கட்டுமானத்துறை வல்லுநர்கள்.
அதிகக் கட்டுமானப்பணிகள் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.இதனால் அந்தத் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் தேவை எப்போதுமே தமிழகத்திற்கு அதிக அளவில் தேவைப்படும்.இந்த நிலையில் தமிழக ஆறுகளில் இயங்கிவந்த முக்கிய 10 குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் கட்டுமானத் தொழிலுக்கு மணல் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இயற்கை வளம் சுரண்டல்
கடந்த ஆண்டுவரை தமிழகத்தில் 38 மணல் குவாரிகள் செயல்பட்டன.ஆனால்,இப்போது விழுப்புரம்-கந்தர்வக் கோட்டை, அரியலூர்-ஜெயங் கொண்டம், நாமக்கல்-மோகனூர், திருச்சி-கொண்டையாம்பட்டி, திருவாச்சி, திருவேங்கிடமலை, சீனிவாசநல்லூர், சிறுகமணி, கரூர்-சிந்தலவாடி, மாயனூர் ஆகிய 10 இடங்களில் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட மணல் குவாரிகள் செயல்படுகின்றன.
மணல் குவாரிகள் மூடல்
இந்த நிலையில் மணல் குவாரிகள் மூலம் ஆறுகள் சுரண்டப்படுகின்றன என்றும்,அதனால் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது என்றும் தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன.வழக்குகளும் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன.இதனால் நடவடிக்கை எடுத்த நீதிமன்றம்,குவாரிகளை மூட உத்தரவிட்டது.அதனையடுத்து 10 மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன.
முடங்கிய கட்டுமானத் தொழில்
தற்போது ஒரு லோடு மணல் விலை ரூ.18 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உயர்ந்தது. இருந்தாலும் மணலுக்கான தேவை குறைந்த பாடில்லை. நாள் தோறும் 50 ஆயிரம் லோடு மணல் தேவைப்படும் நிலையில் 25% நிறைவேற்ற முடியாக நிலையே தொடர்கிறது. மணல் தட்டுப்பாட்டால் ஒரு சதுர அடியில் கட்டிடம் கட்டுவதற்கான செலவு ரூ.1,700-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
தொழிலாளர்கள் பாதிப்பு
மணல் தட்டுப்பாடு காரணமாக சிமெண்ட், இரும்பு கம்பி, கதவு, ஜன்னல், எலக்ட்ரிக்கல் உட்பட 262 மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அவற்றின் நேரடி தொழிலாளர்கள் மற்றும் மறைமுக தொழிலாளர்கள் முடங்கியுள்ளனர். அனைத்து கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத்துடன் இணைந்த 78 சங்கங்களைச் சேர்ந்த 18 ஆயிரம் பொறியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.