நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. நேரில் ஆஜராக போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு விலக்கு அளித்த சென்னை ஹைகோர்ட்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்குமாறு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜின் கோரிக்கையை சென்னை ஹைகோர்ட் ஏற்றது.
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ் வரும் 22-ஆம் தேதி நேரில் ஆஜராக தேவையில்லை என நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலைக்கு சொந்தமான வீடுகளுக்கு சொற்ப தொகையை சொத்து வரியாக சென்னை மாநகராட்சி நிர்ணயம் செய்துள்ளது. எனவே, இந்த சொத்து வரியை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில், ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இந்த வழக்கு பொதுநல வழக்கின் தன்மையில் உள்ளதால், தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வின் விசாரணைக்கு பரிந்துரை செய்கிறேன். மேலும், வழக்கு தொடர்ந்த பொன்.தங்கவேலுவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுவதால், தகுந்த பாதுகாப்பினை சென்னை காவல்துறை ஆணையர் வழங்கவேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி உத்தரவிட்டார்.
ஹைகோர்ட்டின் உத்தரவின் படி மனுதாரர் பொன்.தங்கவேலுவுக்கு சென்னை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் அவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
வேண்டுமென்றே அவமதிப்பு
அதில், ஹைகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் நகலுடன், போலீஸ் கமிஷனருக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. கோர்ட்டின் உத்தரவை அவர் வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்று கூறியிருந்தார்.
கமிஷனரே இப்படியா?
இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்பு கடந்த 16-ஆம் தேதி காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஹைகோர்ட்டு உத்தரவிட்டு 3 மாதங்களாகியும் அதை காவல் துறை ஆணையர் அமல்படுத்தாமல் உள்ளார் என்றால், கீழ் நிலை அதிகாரிகள் எப்படி மதிப்பு கொடுப்பர்? எனவே, இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு காவல் துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும்.
இதென்ன பாவ பூமியா?
ஐகோர்ட்டு என்ன பாவ பூமியா? கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும். அதன் படி ஆஜராவதில் போலீஸ் கமிஷனருக்கு என்ன தயக்கம்? இதில் என்ன கௌரவப் பிரச்சனை உள்ளது? அவர் எப்போது ஆஜராவார்? என்று சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.
22-இல் ஆஜர்
இதைத் தொடர்ந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் காவல் துறை ஆணையர் ஜார்ஜ் 22-ஆம் தேதி நேரில் ஆஜராவார் என கூடுதல் அட்வகேட் ஜெனரல் தகவல் தெரிவித்திருந்தார்.
ஜார்ஜ் கோரிக்கை
இந்த நிலையில் கோர்ட் அவமதிப்பு வழக்குக்கு எதிராக காவல் துறை ஆணையர் ஜார்ஜ் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
நேரில் ஆஜராக விலக்கு
இந்த மனுவானது தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமையிலான அமர்விடம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜார்ஜின் கோரிக்கை ஏற்று அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக அவருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அவமதிப்பு வழக்குக்கு எதிராக ஜார்ஜ் தொடுத்த மனு மீதான விசாரணை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.