மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்... கொறடா மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடருவோம்- தங்க தமிழ் செல்வன்
எங்களை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்த கொறடா ராஜேந்திரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று கூறியுள்ளார்.
புதுச்சேரி: 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்த கொறடா உத்தரவு சட்டப்படி செல்லாது என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
கட்சிக்கு எதிராக செயல்படும் 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தலைமைக் கொறடா ராஜேந்திரன் இன்று சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரைத்தார்.
முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெற்று அவர்கள் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டுள்ளனர். எனவே அந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை பறித்து, தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்கு தாம் கடிதம் மூலம் பரிந்துரைத்துள்ளதாக கூறினார். அரசியல் சட்டத்தின் 10-வது அட்டவணையின் படி 19 பேரும் தகுதியின்மைக்கு ஆளாகின்றனர் என அக்கடிதத்தில் கொறடா குறிப்பிட்டுள்ளார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சபாநாயகர் நோட்டீஸ்
கொறடாவின் பரிந்துரை கடிதத்தை ஏற்று தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என சபாநாயகர் கேள்வி எழுப்பியுள்ளார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
19 பேர் செய்தியாளர்கள் சந்திப்பு
புதுச்சேரியில் ரிசார்ட்டில் இன்று 19 எம்எல்ஏக்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ் செல்வன், சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் எங்களுக்கு வரவில்லை நாங்கள் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் எதிர்ப்பு வாக்களிப்பு
கடந்த பிப்ரவரி மாதம் கொறடா உத்தரவை மீறி தான் எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் வாக்களித்தனர். அவர்கள் மீது ஏன் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழல் அரசு என்று சொன்னாரே? இப்போது அவருடன் இணைந்துதானே ஆட்சி நடத்துகின்றனர்.
அவமதிப்பு வழக்கு
உச்சநீதிமன்றம் இதே போன்றதொரு வேறுமாநில விவகாரத்தில் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை மதிக்காமல் எங்களை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்த கொறடா ராஜேந்திரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்றார்.
50பேர் தயாராக உள்ளனர்
சட்டசபைக்குள் நடக்கும் செயலுக்கு தான் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் 50 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் அணிக்கு வர தயாராக உள்ளனர். அதனால் பயம் வந்து விட்டது. தினகரன் அணிக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு அதிகம் உள்ளது.
மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்
மேலும் பேசிய அவர் எடப்பாடி அரசை ஊழல் என்று சொன்ன ஓபிஎஸ்க்கு தற்போது துணை முதல்வர் பதவி அளித்தது எப்படி. மேலும் சில எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வருவதை தடுக்கவே இந்த மாதிரி மிரட்டல் விடப்படுகிறது. கொறடா ராஜேந்திரன் மிரட்டலுக்கெல்லாம் பயப்படமாட்டோம் என்றும் தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.