தொடர் விடுமுறை: சொந்த ஊருக்கு செல்வோரிடம் பகல் கொள்ளைக்கு தயாராகிவிட்ட ஆம்னி பஸ்கள்!
4 நாள்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்கவுள்ளதால் ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் கிடுகிடு என உயர்ந்துள்ளது.
சென்னை:கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் என்பதால் தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பஸ்கள் தங்களின் கட்டணத்தை மிக மிக அதிகமாக உயர்த்தியுள்ளன.
பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. மேலும் கிருஷ்ண ஜெயந்தி விழா திங்கள்கிழமையும், சுதந்திர தின விழா 15-ஆம் தேதியும் செவ்வாய்க்கிழமையும் வருகிறது.இதனால் மொத்தம் 4 நாள்கள் விடுமுறை கிடைப்பதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதனால் 11-ஆம் தேதி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. காத்திருப்போர் பட்டியலும் தாறுமாறாக காணப்படுகிறது.
இதையடுத்து ஆம்னி பஸ் மூலம் பயணம் செய்யலாம் என்று நினைத்து அவர்களின் இணையதளத்தை முன்பதிவு செய்பவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தீபாவளி, பொங்கல் சீசன் போல் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணம் தாறுமாறாக எகிறியுள்ளது.
அவர்களின் இணையதளத்தின்படி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலான தேதிகளில் பயணிக்க ரூ.780 (ஏ.சி.) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொடர் விடுமுறை எதிரொலியால் 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான தேதிகளில் பயணிக்க ரூ.1,600 கட்டணம் என்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடிக்கான ஆம்னி பஸ்கள் விவரம் இன்றைய பயண கட்டணமும் 11-ஆம் தேதி பயண கட்டணமும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏ.சி. வசதி- ரூ.780 - ரூ.1,600
படுக்கை ஏ.சி.வசதி - ரூ.920 - ரூ.1,600
அதிவேக சொகுசு ஏ.சி. வசதி- ரூ.900 - ரூ.1,900
பென்ஸ் படுக்கை ஏ.சி.வசதி- ரூ.1,100 - ரூ.1,900
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்டணத்தை உயர்த்தும் ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.