நெல்லை மாவட்டத்தில் தொடரும் நகை திருட்டுகள்: வீடுகளை விட்டு வெளியே செல்ல பொதுமக்கள் அச்சம்
நெல்லை மாவட்டத்தில் தொடரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தொடரும் நகை திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் தெரிவித்து உள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் நடந்துள்ள தொடர் கொள்ளை சம்பவங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் மடவிளாகம் தெருவில் தங்க, வெள்ளி அடகு கடை நடத்தி வந்தார். வழக்கம் போல் இரவில் நகைகளை கடையில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில் இன்று அதிகாலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த அப்பகுதியில் வாக்கிங் செல்பவர்கள் சுரேஷ்க்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கவுரி மனோகரி தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் வி.கே.புரம் அம்பலவாணபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் சுகுமாரி ஜூவல்லரி ஒர்க்ஸ் என்ற பெயரில் நகை நகை நடத்தி வருகிறார். இவரும் வழக்கம் போல் நகை பட்டறையை இரவில் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு பட்டறைக்கு வந்தபோது பட்டறை பூட்டு உடைக்கப்பட்டு கிடைப்பதை பார்த்து அதிர்ந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 65 கிராம் தங்கம், வெள்ளி கொலுசு, வெள்ளி டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் மாயமாகி இருப்பதை பார்த்து உடனடியாக வி.கே.புரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இது தொடர்பாக வி.கே.புரம் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.இரண்டு சம்பவங்களும் ஒரே கும்பல் செய்துள்ளதா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றரனர். அதிகரிக்கும் நகை திருட்டால் பொது மக்கள் பயத்தில் உள்ளனர்.