குழந்தை கடத்தல் எதிரொலி.. ஈரோடு ஹாஸ்டல் மாணவிகள் தேவையில்லாமல் வெளியில் செல்ல தடை!
விடுதி மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு: தமிழகத்தில் குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவியுள்ளதாக பரவி வரும் வதந்திகள் பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தாக்கியதில் மனநலம் பாதிக்கப்பட்டவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வதந்தியை பரப்பியதாக இளைஞர் ஒருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஈரோட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாணவியர் விடுதி உள்ளது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் தங்கியிருந்து கல்வி பயில்வதோடு விளையாட்டு பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது கோடைகால பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இதில் கூடைபந்து, வாலிபால், நீச்சல் மற்றும் தடகள விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
விளையாட்டு பயிற்சிக்கு வரும் மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான் விதித்துள்ளார்.அதில் மாணவ மாணவிகளை அவரது உறவினர்கள் மட்டுமே அழைத்து செல்ல வேண்டும், அல்லது பெற்றோர் அறிமுகப்படுத்திய நபர்கள் அழைத்து செல்லலாம் என கூறியுள்ளார்.இதேபோல் மாணவிகள் தேவையில்லாமல் விடுதியை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.