"பீப்" பேச்சு பேசிய செல்வி ராமஜெயத்துக்கு மீண்டும் "டிக்கெட்"!
சென்னை: சர்ச்சைப் பேச்சுக்களைப் பேசியவர்களுக்கும் கூட அதைப் பொருட்படுத்தாமல் முதல்வர் ஜெயலலிதா சீட் கொடுத்திருப்பது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதில் ஒருவர்தான் செல்வி ராமஜெயம்.
புவனகிரி தொகுதி எம்.எல்.ஏவான செல்வி ராமஜெயத்திற்கு மீண்டும் அதே தொகுதியில் ஜெயலலிதா சீட் கொடுத்து அழகு பார்த்துள்ளார்.
செல்வி ராமஜெயம் சமீபத்தில்தான் ஒரு சர்ச்சையில் சிக்கியிருந்தார். இருப்பினும் அந்த சர்ச்சையைப் பொருட்படுத்தாமல் அவருக்கு சீட் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.
புவனகிரி வட்டாட்சியராக இருப்பவர் ராஜவேல். இவரிடம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும், முன்னால் அமைச்சருமான செல்வி ராமஜெயம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கடந்த ஆண்டு பெய்த கன மழை பெருவெள்ளத்தால் கடலூர் மாவட்டமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ள நிவாரணம் குறித்து வட்டாட்சியரிடம் எம்.எல்.ஏ கேட்டுள்ளார்.
பல பகுதிகளில் வெள்ள நிவாரணமே வரவில்லை. எங்களுக்குக் கெட்ட பெயர் வர வேண்டும் என்றே நடக்கிறீர்களா என்று ஆரம்பத்தில் நிதானமாகப் பேசுகிறார். அதற்கு வட்டாட்சியர் மேடம் நீங்க எதுவா இருந்தாலும் கலெக்டரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்கிறார். இதற்கு எம்.எல்.ஏ. என்னங்க நீங்க, எதுக்கெடுத்தாலும் கலெக்டரிடம் பேசுங்க என்கிறீர்கள் என்று கோபமாக கேட்கிறார். மேலும் என்ன மயித்துக்கு கணக்கெடுத்தீங்க என்றும் சற்று தரகக்குறைவாக அதிகாரியை திட்டுகிறார். அத்துடன் செல்போன் பேச்சு கட் ஆகிறது.
இந்த விவகாரம் புவனகிரியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் செல்விக்கு மீண்டும் எம்.எல்.ஏ சீட் கிடைத்துள்ளது கட்சியினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.