விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், நாகசாமிக்கு பத்ம விருது.. வெடித்த சர்ச்சை.. பின்னணி என்ன?
Recommended Video
சென்னை: மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் அதை பெற்ற இருவரின் பின்புலம்தான் சர்ச்சையின் மைய வேராக மாறியுள்ளது.
சர்ச்சைகளுக்கும், தமிழகத்திற்கும் சமீபகாலமாக ரொம்பவே தொடர்பு உள்ளது. ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியானால் ஒரு சர்ச்சை, தெர்மாக்கோல் போன்ற புது திட்டங்களால் சர்ச்சை, திட்டங்களை வாபஸ் பெற்றால் அதிலும் சர்ச்சை, கருத்தரங்கில் பேசினால் சர்ச்சை, உட்கார்ந்திருந்தால் சர்ச்சை என சர்ச்சை மயமாகிவிட்டது தமிழகம்.
இந்த சர்ச்சைகளுடன் இப்போது மற்றொரு சர்ச்சையும் உலவுகிறது. அதுதான் பத்ம விருதுகள் தொடர்பான சர்ச்சை.
பத்ம விருதுகள் பெற்றவர்கள்
தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமி, பிரபல கிரிக்கெட் வீரர் டோணி, பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானி உள்ளிட்ட 9 பேருக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி இருக்கிறது. மதுரையைச் சேர்ந்த கிராமிய பாடல் இசை கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கோவையைச் சேர்ந்த 98 வயதான யோகா பயிற்சி நிபுணர் நானாம்பாள், வனவிலங்கு பாதுகாவலர் ரோமுலஸ் விட்டாகர் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு உள்ளது.
இருவர் விருதுகளால் சர்ச்சை
இதில் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மற்றும், தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமி ஆகியோருக்கு ஏன் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன என கணிசமானோர் சமூக வலைத்தளங்களில் கேள்விக்கணைகளை தொடுத்து வருகிறார்கள். இருவருமே திறமைசாலிகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றபோதிலும், இருவருமே இந்துத்துவா ஆதரவாளர்கள் என விமர்சனம் செய்கிறார்கள், சில நெட்டிசன்கள்.
ஆண்டாளுக்காக உண்ணாவிரதம்
நாட்டுப்புற பாடல்களை சமகால தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்ததில் முன்னோடியான விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், சமீபத்தில் மற்றொரு விஷயத்திற்காக அறியப்பட்டார். ஆண்டாள் குறித்து வைரமுத்து தெரிவித்த சர்ச்சை கருத்தை கண்டித்து அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஆழ்வார்கள் பாடல்களை 7 வருடங்களாக ஆய்வு செய்து டாக்டர் பட்டமும் பெற்ற தனக்கு, ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்த வைரமுத்து கருத்து பெரும் மனவேதனையை அளித்ததாக அவர் உருக்கமாக தெரிவித்தார்.
சர்ச்சையின் சாரம்
ஆண்டாள் பற்றி வைரமுத்து சர்ச்சை கருத்து தெரிவித்த நாளில், தனது வீட்டு பூஜையறையில் வைக்கப்பட்டிருந்த ஆண்டாள் போட்டோ கீழே விழுந்ததாக குறிப்பிட்ட அவர், இதனால், அந்த ஆண்டாள் படத்திற்கு எதிரிலேயே கணவருடன், உண்ணா நோன்பு இருப்பதாக அறிவித்தார். இதன்பிறகு, இந்துமத தலைவர்கள் கோரிக்கையை ஏற்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அவர் தனது உண்ணாவிரதத்தை அவர் நிறைவு செய்தார். இந்த சூழ்நிலையில், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது நெட்டிசன்கள் விமர்சனம்.
நாகசாமியின் நூல்
தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற முனைவர் நாகசாமி 'தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தின் கண்ணாடி' (Mirror of Tamil and Sanskrit) என்ற பெயரில் ஆங்கிலத்தில் நூல் எழுதியிருந்தார். தமிழைச் செம்மொழியாக வளர்த்தது சமஸ்கிருதம்தான் என்று சில தரவுகளை நாகசாமி தனது நூலில் குறிப்பிட்டிருந்தார். மேலும், சிலப்பதிகாரம் ஒரு காப்பியமல்ல, அது நாடகச் செய்யுள் நாட்டியத்திற்காக எழுதப்பட்டது என்றும் சமஸ்கிருத பாரத சாஸ்திரத்திலிருந்து எழுதப்பட்டது என்றும் அந்நூலில் நாகசாமி கூறியிருந்தார்.
சமஸ்கிருதத்திற்காக விருதா?
அதேபோல, தமிழும் சமஸ்கிருதமும் நெருங்கிய உறவுடன் ஒன்றையொன்று வளர்த்தன. கடந்த 50 ஆண்டுகளாகத்தான் தமிழ் வேறு, சமஸ்கிருதம் வேறு, என்ற பிரிவினைக் கருத்து தமிழ் நாட்டில் வளர்க்கப்பட்டது என்றும் அவர் தனது நூலில் கூறியிருந்தார். எனவே, சமஸ்கிருத மொழியை தூக்கிபிடித்ததால்தான் நாகசாமிக்கு விருது வழங்கப்பட்டது என்பது தமிழ் ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால் பத்ம விருதுகள் சர்ச்சை விதையை தூவியுள்ளன.