இன்னொரு 'முத்துகுமாரசாமி' விவகாரம்: கொந்தளிப்பில் அரசு ஊழியர்கள்! சிக்குகிறார் தென்மாவட்ட அமைச்சர்!!
அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் தற்கொலைக்கு அமைச்சர் ஒருவரே காரணம் என்கின்றன அரசு ஊழியர் சங்கங்கள்.
சென்னை: அருப்புக்கோட்டையில் நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் தற்கொலைக்கு தென்மாவட்ட அமைச்சர் ஒருவரின் நெருக்கடியே காரணம்தான் என்று அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
திருநெல்வேலியில் கடந்த ஆண்டு வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார். பணிநியமனங்கள் தொடர்பாக அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த நெருக்கடியால்தான் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து அக்ரிகிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது இதே போன்ற சம்பவம் அருப்புக்கோட்டையில் நடந்துள்ளதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு அரசு ஊழியர் சங்கத்தின் நீதி கோராடி போராடி வருகின்றனர்.
இது குறித்து விசாரித்த போது, இடைத்தேர்தல் செலவுக்காக மாவட்ட அரசு உயர் அதிகாரிகளிடம் ரூ10 லட்சம் வசூலிக்க தென்மாவட்ட அமைச்சர் ஒருவர் உத்தரவிட்டிருக்கிறார். இதை ஏற்று பல அரசு அதிகாரிகள் வசூலித்து கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் மட்டும் இத்தொகையை தர முடியாது என கூறியுள்ளார். இதனால் கடுப்பாகிப் போன அந்த அமைச்சர் தடித்த வார்த்தைகளால் கேவலமாக முத்து வெங்கடேஸ்வரனை திட்டியுள்ளார். இதில்தான் மனமுடைந்த முத்து வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார் என கூறுகின்றனர்.
ஆகையால் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து அன்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுத்தது போல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.