கருணாநிதியின் "சிந்து" வாழ்த்திலும் சர்ச்சையை கிளப்பிய நெட்டிசன்கள்
சென்னை: ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு உடனடியாக வாழ்த்து தெரிவித்திருந்தார் திமுக தலைவர் கருணாநிதி. அவரது வாழ்த்துகள் சமூக வலைதளங்களில் இடம்பெற்ற நேரத்தை முன்வைத்து நெட்டிசன்கள் ஆட்டம் போட்டு கடைசியாக வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து. போட்டி முடிவுகள் வெளியான சில நிமிடங்களிலேயே தமது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் சிந்துவுக்கும் வெண்கலம் வென்ற சாக்ஷிக்கும் கருணாநிதி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அந்த வாழ்த்தில், சிந்துவின் ஆட்டம் துல்லியமாக இருந்தது என்று பாராட்டியும் இருந்தார். இதில் பஞ்சாயத்து எங்கே எனில் கருணாநிதியின் ட்விட்டர் பதிவில் காட்டும் நேரம் 9.13AM என இருக்கிறது.
ஆஹா, சிந்து விளையாடுவதற்கு முன்னரே கருணாநிதி, 'ஆட்டம் துல்லியமாக இருந்ததாக' பாராட்டினார் என நெட்டிசன்கள் குறுக்குசால் ஓட்டி வாட்ஸ் அப் வரை பஞ்சாயத்தை கொண்டு சேர்த்தனர்...
பின்னர்தான் ட்விட்டரில் காண்பிப்பது சர்வதேச நேரம் என்பதை உணர்ந்த நெட்டிசன்கள் மன்னிப்பு கேட்டு இந்த விமர்சனப் பதிவுகளை நீக்கியும் விட்டனர்..
எப்படியெல்லாம் பஞ்சாயத்து கூட்டுறாங்கப்பா!