வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென் மேற்கு பருவமழை தற்போது வலுப்பெற்று வருவதுடன், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம், சின்னக்கல்லாரில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும், வால்பாறை, நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் கூடலூர் பஜாரில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டி உள்ளது.
வடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசாவை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருந்தாலும், இதனால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.