For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லையில் ரூபாய் நோட்டு மோசடி.. பா.ம.க. நிர்வாகி உள்பட 6 பேர் சிறையில் அடைப்பு

நெல்லை மாவட்டத்தில் பழைய ரூபாய் நோட்டுக்களை கமிஷனுக்கு மாற்றி தரும் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் ரூபாய் நோட்டு மோசடியில் ஈடுபட்ட பா.ம.க. பிரமுகர் உள்பட 6 பேர் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி நகர பஞ்சாயத்து அலுவலகம் அருகே நேற்று முன்தினம் இரவில் சந்தேகத்தின் பேரில் 6 பேர் கும்பலை போலீசார் பிடித்தார்கள். விசாரணையில் அவர்கள் மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 35), முத்துராமலிங்கம் (36), மானாமதுரையைச் சேர்ந்த தளபதி (35), தென்காசியைச் சேர்ந்த கித்து (48), முத்துக்குமார் (37) என்றும், மற்றொருவர் சேரன்மாதேவியைச் சேர்ந்த மூக்காண்டி (35) எனவும் தெரியவந்தது.

 converting black money for commision was arrested in nellai

இவர்கள் 6 பேரும் சேர்ந்து பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கள்ளத்தனமாக அவர்களுக்குள்ளாகவே மாற்றுவதற்கு முயற்சித்ததாக தெரியவந்தது. எனவே அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அதைதொடர்ந்து மூக்காண்டியின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் அவரது வீட்டில் புதிய 500 ரூபாய் நோட்டுகளுடன் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. மொத்தம் 10 கட்டுகள் இருந்தன. அந்த கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து பார்த்த போது, அந்த பணக்கட்டுகளின் மேல் பகுதியில் மட்டும் சில புதிய ரூ.500 நோட்டுகளை வைத்துவிட்டு, உள்ளே வெறும் காகிதங்களை வைத்து கட்டி இருப்பது தெரியவந்தது.

அதன்பின்பு நடத்திய விசாரணையில் மூக்காண்டி தெரிவித்ததாக பரபரப்பு தகவல்களை போலீசார் கூறினர். அதன் விவரம் வருமாறு:

யாரிடமாவது செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இருந்தால் அவர்கள் தன்னிடம் கமி‌ஷன் கொடுத்துவிட்டு, புதிய ரூ.500 நோட்டுகளாக மாற்றிச் செல்லலாம் என மூக்காண்டி சிலரிடம் கூறியுள்ளார். அது எப்படியோ மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார், முத்துராமலிங்கம் உள்பட மேற்கண்ட 5 பேருக்கும் தெரியவந்தது. அவர்கள் மூக்காண்டியை தொடர்பு கொண்டு பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக சேரன்மாதேவிக்கு வந்து பேசிக் கொண்டிருந்த போதுதான் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர்.

அவர்களிடம் கட்டுக்கட்டாக பழைய ரூபாய் நோட்டுகளை மொத்தமாக வாங்கிவிட்டு, சில புதிய ரூபாய் நோட்டுகளுடன் மோசடியாக தயார் செய்து வைத்திருந்த கட்டுகளை அவர்களிடம் கொடுப்பதற்காக மூக்காண்டி நினைத்திருந்தார் என்றும், ஆனால், கள்ளத்தனமாக இந்த மோசடி நடப்பதற்குள் மூக்காண்டி உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்துவிட்டதாக போலீசார் கூறினார்கள்.

கைதான மூக்காண்டி பா.ம.க. சேரன்மாதேவி ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
6 persons arrested for converting black money into white at nellai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X