"ஆயிரத்தில் ஒருவன்" எம்ஜிஆரை ஆர்.கே.நகரில் வீழ்த்தும் "தனி ஒருவன்" தினகரன்!
இரட்டை இலை சின்னத்தை காட்டிலும் குக்கர் சின்னமே மிகவும் பிரபலமாகியுள்ளதாக ஒரு கருத்து கணிப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: வேட்பாளரின் சின்னத்தையும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் பெயரையும் சரியாகப் பொருத்துவதில் பிரஷர் குக்கர்- டிடிவி தினகரன் இணை 91.6 சதவீதம் பேரால் அடையாளம் காணப்படுவதாக பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவுகிறது.
இதுகுறித்த பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் சுவாரசிய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன.
ராஜநாயகம் அணியினர்
பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பில் கிடைத்த விவரங்கள் பற்றி, இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: டி.டி.வி.தினகரனுக்கு இந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டு இருக்கும் பிரஷர் குக்கர் சின்னத்தை அத்தொகுதியிலுள்ள 91.6 சதவீதம் மக்கள் எளிதாக அடையாளம் காண்கிறார்கள்.
பின்னுக்கு தள்ளப்பட்ட மதுசூதனன்
அதிமுகவின் இரட்டை இலையை 81.1 சதவீதம் பேரே எளிதில் அடையாளம் கொண்டுள்ளதாக இந்த சர்வே கூறுவதை பார்க்கும் போது ஜெயலலிதா இறந்தவுடன் இரட்டை இலையை மக்கள் மறந்து விட்டனர் என்பது கண்கூடாக தெரிகிறது. உதயச்சூரியனை 77.8 சதவீதத்தினரும், மெழுகுவர்த்திகள் சின்னத்தை 14.2 சதவீதத்தினரும், தாமரை சின்னத்தை 10.4 சதவீதம் பேரும் அடையாளம் காண்கின்றனர்.
குக்கர் பிரபலம்
கடந்த முறை தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது. அப்போது தொப்பியை பிரபலப்படுத்த தினகரன் படாதபாடுபட்டார். இந்த முறை அவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்காமல் பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரஷர் குக்கர் சின்னம் தாய்மார்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
சுயேச்சைக்குத்தான் மவுசு
இந்த இடைத்தேர்தலில் தினகரன் நிச்சயம் வெல்வார் என்று கருத்து கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. இதை வைத்து பார்க்கும்போது இரட்டை இலையை மக்கள் மதிக்கவில்லை என்று தெரிகிறது. நேற்று சுயேச்சையாக களம் இறங்கிய தினகரனுக்கு இத்தனை மவுசா என்று மற்ற அரசியல்வாதிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தாமரையை பின்னுக்கு தள்ளிய மெழுகுவர்த்தி
மத்திய ஆட்சி செய்யும் கட்சியாகவும் பிரபல தேசிய கட்சியாகவும் உள்ள தாமரை சின்னத்தையும் அதன் வேட்பாளரையும் அடையாளம் காணுவதில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அவர்களை முந்தியுள்ளது சீமானின் இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னம்.
என்ன காரணம்
பிரஷர் குக்கர் சின்னம் அறிவித்த கொஞ்ச நாட்களிலேயே தொகுதி முழுவதும் சென்றுவிட்டது. வாக்காளர்களுக்கு பிரஷர் குக்கர் லஞ்சமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் அதிமுக அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு எரிச்சலை ஊட்டியுள்ளன. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் குக்கர் என்பதாலும் அது பிரபலம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.