தேர்தல் வருதா.. முதல்ல ஜார்ஜை மாத்துங்கப்பா.. இது 3வது முறை!
சென்னை: தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் காவல்துறை அதிகாரி ஜார்ஜ் மாற்றப்படுவது வழக்கமாகி விட்டது. அந்த அளவுக்கு "நல்ல பெயரை" அவர் சம்பாதித்து வைத்துள்ளார்.
இப்போது மாற்றப்பட்டுள்ளதையும் சேர்த்து அவர் 3வது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் ரீதியாக பெரும் செல்வாக்குடன் வலம் வரும் அவர் அதிமுகவுக்கு சாதகமானவர் என்ற பெயரையும் சம்பாதித்து வைத்துள்ளார்.
இதன் காரணமாகத்தான் தேர்தலுக்குத் தேர்தல் அவரை மாற்றும் நிலைக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்படுகிறது. இப்போது 3வது முறையாக அவரை இடமாற்றம் செய்துள்ளனர்.
கமிஷனர் ஜார்ஜ்
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்து வந்தார் ஜார்ஜ். பூர்வீகம் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம். 1984ம் ஆண்டு தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர்.
ராமநாதபுரத்தில் முதல் பணி
இவரது முதல் பணி தண்ணீர் இல்லாக் காடு என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட ராமநாதபுரம் ஆகும். அங்கு தொடங்கிய இவரது பணி தற்போது சென்னையில் வந்து நிற்கிறது.
2012ம் ஆண்டு முதல் கமிஷனர்
பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள ஜார்ஜ் கடந்த 2012ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இவர் இங்கு கமிஷனரானார். சசிகலா தரப்புக்கு மிகவும் நெருக்கமானவராக இவர் கருதப்படுகிறார்.
2014ல் இடமாற்றம்
இவர் தேர்தலுக்குத் தேர்தல் இடமாற்றம் செய்யப்படுவது கிட்டத்தட்ட தொடர் கதையாகி விட்டது. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது இவரை கமிஷனர் பொறுப்பிலிருந்து தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. பின்னர் மீண்டும் திரும்பி வந்தார்.
2016 சட்டசபைத் தேர்தலின்போது
பின்னர் 2016 சட்டசபைத் தேர்தலின்போதும் இவரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. இவரால் முறைகேடுகள் நடைபெறும் என்பதால் தேர்தல் ஆணையம் ஜார்ஜை இடமாற்றம் செய்தது.
3வது முறையாக மாற்றம்
தற்போது சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போதும் இவரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது. இப்போதும் ஜார்ஜ் மீது அதே புகார்களை எதிர்க்கட்சிகள் கிளப்பியதால்தான் இவர் இடமாற்றமாகியுள்ளார்.
வரலாறு படைக்கிறார்
சென்னை போலீஸ் கமிஷனராக அதிக காலம் இருந்தவர் ஜார்ஜ்தான் என்று கூறுகிறார்கள். தற்போது அதிக அளவில் தேர்தல் சமயத்தின்போது இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரியாகவும் இவர் மாறி வருவது குறிப்பிடத்தக்கது.