இ-கோலையின் முதல் எதிரி செப்புப் பாத்திரங்கள் – மருத்துவர்கள் தகவல்
சென்னை: செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் குடிநீரை தேக்கிவைக்கும் பழக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
செப்பு மற்றும் பித்தளை ஆகிய உலோகங்கள் தண்ணீரில் கெடுதலை விளைவிக்கும் நுண்ணுயிர்க் கிருமிகள் பெருகுவதை தடுக்கும் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர். பி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தண்ணீரை இந்த பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நோய் தடுக்கும் உலோகங்கள்:
பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்க்கிருமிகளை கொல்லும் தன்மை உள்ளது என்றும், அதிலும் குறிப்பாக செப்பு மற்றும் பித்தளை போன்ற உலோகங்களுக்கு அந்தத் தன்மை அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கங்கை நீர் ரகசியம்:
இதன் காரணத்தினாலேயே கங்கை நீர், செப்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆயுர்வேத மருத்துவம்:
செப்பு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கனவே இது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
எகிப்திலும் செப்பு பாத்திரம்:
சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை.செப்புப் பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட குடிநீர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என ஆயுர்வேதம் கூறுகிறது. எகிப்தில் தொன்மைக் காலம் முதலே செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கும் பழக்கம் உண்டு.
இ-கோலைக்கு எதிரி:
உலகையே அச்சுறுத்தும் "இ-கோலை" பாக்டீரியாவைக் கொல்லும் திறன் செப்பு உலோகத்திற்கு உண்டு என பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட இது போன்ற திறன் கிடையாது.
இயற்கை பியூரிபையர்:
செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால் அறையின் வெப்ப நிலையிலேயே நான்கே மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன.
4 நாளில் சாவு:
ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் நான்கு நாட்கள் உயிர் வாழ்கின்றன.
ரத்த சோகை மருந்து:
ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது. உடலில், "மெலானின்' என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், "விடிலிகோ" என அழைக்கப்படும் வெண் படையும் குறைகிறது.