சென்னையில் கார் சீட்பெல்ட் அணியாத 331 பேரிடம் அபராதம்
சென்னையில் கார் ஓட்டுபவர்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டவேண்டும் என்று போக்குவரத்துத்துறைப் போலீசார் அறிவித்தனர்.
போலீசாரும் வாகன ஓட்டிகளிடம் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாகன ஓட்டிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து இதற்கான காலக்கெடு டிசம்பர் 9ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. நேற்றோடு காலக்கெடு முடிவடைந்ததை சென்னையில் கார் சீட் பெல்ட் அணியாத டிரைவர்களிடம், நேற்று முதல் தலா ரூ.100 அபராதம் விதிக்கும் திட்டம் தொடங்கியது.
இதனையடுத்து சென்னையில் புறநகர் சாலைகளிலும், நகர் பகுதிகளிலும் போக்குவரத்துப் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று முதல் நாளன்று, கார் சீட் பெல்ட் அணியாத 331 பேரிடம், தலா ரூ.100 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்றும், மொத்தம் ரூ.33,100 அபராத தொகை கிடைத்தது என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
மதுரவாயல் பகுதிகளில் சீல்ட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தவர்களை நிறுத்திய துணை ஆணையர் எஸ். பன்னீர் செல்வம், நெடுஞ்சாலைகளில் விபத்தின் போது ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கவே சீட் பெல்ட் அணியச் சொல்லுகிறோம் என்றார். நகர்பகுதிகளில் மெதுவாகத்தான் வாகனங்களை ஓட்டிச் செல்வார்கள். அதேசமயம் நெடுஞ்சாலைகளில் வேகமாக வாகனம் ஓட்டுவார்கள், எனவே சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றார்.
முதல்முறையாக பிடிபடுபவர்களிடம் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இரண்டாம்முறையாக பிடிபட்டால் ரூ.300 அபராதம் கட்டவேண்டும் என்றார் எஸ். பன்னீர்செல்வம்.
பொதுமக்களும் போக்குவரத்துத்துறை போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். சில நாட்கள் மட்டுமே கண்காணித்துவிட்டு மறுபடியும் கிடப்பில் போட்டுவிடக்கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.