வரத்து அதிகரிப்பு: மல்லி விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கொத்த மல்லி இலை வரத்து அதிகரித்துள்ளதையடுத்து அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் என்றாலே விவசாயம் நிறைந்த பகுதிகள் அதிகம் இயற்கை அளித்த கொடையாக இம்மாவட்டம் விளங்குகிறது. இம் மாவட்டத்தில் காய்கறிகளுக்கு பெயர் போன பகுதிகளாக பாவூர் சத்திரம், ஆலங்குளம், சாம்பவர் வடகரை, சுரண்டை, ஊத்துமலை ஆகிய பகுதிகளாகும்.
இங்கு விளையும் காய்கறிகள் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது தமிழ் நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது போதிய மழை இல்லாத காரணத்தால் இந்த பகுதிகளில் காய்கறி விளைச்சல் குறைந்த அளவே உள்ளது.
தற்போது தென் மேற்கு பருவமழை காலம் என்பதால் "கொத்த மல்லி இலை" சாகுபடியை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர் இந்த பகுதி விவசாயிகள். இதனால் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த வாரம் கிலோ ரூ.60 முதல் 85 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது கிலோ ரூ.25 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மல்லி இலை வரத்து அதிகரித்த போதும் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு போதிய விலையில்லாமல் வேதனையடைந்துள்ளனர்.