லாக்டவுன் - முடங்க கூடாது.. வாழ்ந்து காட்ட முன்னுதாரணமாக திகழும் தனியார் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன்
உளுந்தூர்பேட்டை: லாக்டவுன் அமலில் உள்ள காலத்தில் வருவாய் போய்விட்டதே என முடங்கிவிடாமல் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுகிறார் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இவர் தனது உழைப்பின் மூலம் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்தநிலையில் கொரோனா காரணமாக மார்ச் மாதம் 23ம் தேதி முதல் லாக்டவுன் அமலுக்கு வந்தது. ஒருகட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டது.
தேவேந்திர குல வேளாளர் மக்களிடம்... எல்.முருகன் கபடநாடகத்தை தொடங்கியிருக்கிறார் -கே.எஸ்.அழகிரி
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பொதுப் போக்குவரத்து நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் பேருந்து மற்றும் கார், வேன் ஓட்டுநர்களுக்கு அரசின் மூலம் எந்தவிதமான ஊதியமும் வழங்கப்படவில்லை. இதனால் தனியார் நிறுவனங்கள் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தொகையை இடைக்கால ஊதியமாக வழங்கி வருகின்றனர். இதனிடையே நிர்வாகம் வழங்கும் அந்த ஊதியத்தை பெற்றும் முழுமையாக குடும்பத்தை காப்பாற்ற முடியாத நிலையில் தவிக்கும் பல குடும்பங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இந்த நிலையில் தனது குடும்பத்தை முழுமையாக கௌரவத்தோடு காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன் கடந்த ஒருவாரமாக மருத்துவ குணம் கொண்ட வேப்பங்கொட்டையை சேகரித்து அதை கடைகளில் விற்று அதில் கிடைக்கும் தொகையை குடும்பத்திற்காக செலவழித்து வருகிறார். ஒருநாளைக்கு சுமார் 2 கிலோ முதல் 3 கிலோ வரை மட்டுமே கிடைக்கும் இந்த வேப்பங்கொட்டையை பதப்படுத்தி அதன்பின்னர் கடையில் விற்று அதில் கிடைக்கும் தொகையை தனது குடும்பத்திற்கு மகிழ்ச்சியாக செலவழித்து வருவதாக கூறுகிறார். மேலும் மணிகண்டன் போன்ற தனியார் பேருந்து, லாரி, கார்,வேன் ஓட்டுநர் களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது...