செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி தலைமை மருத்துவர் கொரோனாவால் பலி.. மு.க ஸ்டாலின் இரங்கல்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுகுமார் கொரோனா காரணமாக பலியானதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் 4 டாக்டர்கள், 5 செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுகுமார் இன்று கொரோனா பலியானார். அவரின் இறப்பு செங்கல்பட்டிலும் தமிழகத்தில் இந்த இறப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சுகுமார் மரணத்திற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் போஸ்டில், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் திரு. சுகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகவும் வேதனையுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நகர்ப்புறங்களில் வீசிய கொரோனா அபாய அலை... கிராமப்புறங்களில் வீசத் தொடங்கிவிட்டது -மு.க.ஸ்டாலின்
சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் மரணம்- கொரோனா சிகிச்சையில் முன்கள வீரர்களாக இருப்போரைப் பாதுகாப்பதில் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து காட்டி வரும் அலட்சியத்தின் அடையாளமாகும்.
அரசின் இதுபோன்ற தோல்விகள், கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், செவிலியர் ஆகியோருக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி, நோய்த் தடுப்பில் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஆகவே முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாத்திட,இனியொரு மரணம் நிகழ்ந்து விடாமல் தடுத்திட, உரிய மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
Recommended Video
அரசுத் தலைமை மருத்துவர் திரு. சுகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.