தளபதி அறிவாலயத்தை எடுத்துக்கோங்க.. கொரோனா பயன்பாட்டிற்கு தூக்கிக் கொடுத்த திருப்பத்தூர் திமுக!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்காவில் உள்ள மதனாஞ்சேரி ஊராட்சியில் இயங்கி வரும் திமுகவின் தளபதி அறிவாலயம் கட்டிடத்தை திமுக கட்சி கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக கொடுத்துள்ளது.
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு பணிகள் தமிழகம் முழுக்க தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 234 ஆக உயர்ந்துள்ளது.
110 பேருக்கு நேற்று மட்டும் கொரோனா பாதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு பணிகளில் திமுக கட்சியும், அதன் இளைஞரணியும் தீவிரமாக செயலாற்றி வருகிறது,
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்காவில் உள்ள மதனாஞ்சேரி ஊராட்சியில் பொது பயன்பாட்டில் இயங்கி வரும் திமுகவின் தளபதி அறிவாலயம் கட்டிடத்தை திமுக கட்சி கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக கொடுத்துள்ளது.
இதுகுறித்து திமுக மாவட்ட இளைஞரணி நிர்வாகி வி.எஸ் ஞானவேலன் தெரிவித்ததாவது, திமுகவின் இந்த தளபதி அறிவாலயம் திமுக இளைஞரணி சார்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தளபதி அறிவாலயம் 3000 சதுர அடி கொண்டது ஆகும். இங்கு மொத்தம் 20 பேர் தனியாக ஒருவரை ஒருவர் தொடாமல் இருக்க முடியும்.
இந்த கட்டிடத்தை தற்போது திமுக, கொரோனா பயன்பாட்டிற்காக கொடுத்துள்ளது. அதன்படி இந்தழ் கட்டிடத்தை கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த பயன்படும் வார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் இங்கு தினமும் மக்களுக்கு மூன்று வேளை உணவு கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
திமுக இளைஞரணியின் இந்த முடிவு அங்கு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று உள்ளது. மக்கள் இந்த முடிவை வரவேற்று இருக்கிறார்கள்.