சென்னையில் பயங்கரம்.. பட்டப்பகலில் மாநகராட்சி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அலறியடித்து ஓடிய மக்கள்
மாநகராட்சி ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை: காசிமேடு பகுதியில் மாநகராட்சி ஊழியர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலிலேயே துரத்தி துரத்தி சென்று படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காசிமேடு, அமராஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். 40 வயதான இவர், ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தவர்.
இன்று காலை சிவக்குமார் காசிமேட்டில் உள்ள காசிபுரம் என்ற பகுதிக்கு சென்றார். எப்போதுமே பரபரப்பாக, மக்கள் அதிக அளவு நடமாடக்கூடிய பகுதி இது. இங்குள்ள ஒரு டீ கடையில் சிவக்குமார் டீ குடித்துக் கொண்டு இருந்தார். சிவக்குமார் டீ கடைக்கு செல்லும்முன்பே அங்கு 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரிவாள், கத்தியுடன் ஒளிந்திருந்து, சிவக்குமாருக்காக காத்துக் கொண்டிருந்தது.
பின்னர் சிவக்குமார் டீ குடித்துகொண்டிருந்தபோது, அவரை அந்த கும்பல் சுற்றிக் கொண்டது. கும்பலை கண்டதும் வெலவெலத்துப் போன சிவக்குமார், ஓட்டம் பிடிக்க தொடங்கினார். ஆனால் சிவக்குமாரை விடாமல் அந்த கும்பல் துரத்தி துரத்தி சென்று சரமாரியாக வெட்டியது. இதில் உடலின் அநேக இடங்களில் அரிவாள், கத்தி பட்டு சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
சிவக்குமாரை ஓட ஓட விரட்டியதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் சிலர் அலறியடித்து ஓட்டமும் பிடிக்க தொடங்கினர். அப்போது அங்கிருந்த நபர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவக்குமாரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக காசிமேடு போலீசார் விசாரணையை கையிலெடுத்துள்ளனர். அதில், சிவக்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கால்வாய் தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல, வேறு ஒரு பிரச்சனை காரணமாக கஞ்சா வியாபாரியுடனும் முன்விரோதம் தீவிரமாக இருந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிந்தது. எனவே சிவக்குமாரை கொலை செய்தது யார் என தங்களுடைய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.