சென்னை ஸ்கைவாக் மாலில் கேஎப்சி உட்பட 32 ரெஸ்டாரண்டுகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி
சென்னை: லைசென்ஸ் பெறாமலேயே ரெஸ்டாரண்டுகள் நடத்தி வந்த குற்றத்திற்காக சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் பூந்தமல்லி ஹைரோடில் அமைந்துள்ள பிரபல அம்பாஸ்கைவாக் மாலில் செயல்பட்டு வந்த 32 உணவகங்களுக்கு சீல் வைத்துள்ளனர்.
இந்த மாலில் உள்ள ஃபுட் கோர்ட்டில், கேஎப்சி, ஜூனியர் குப்பண்ணா, மெக்டொனால்ட், சப்வே, பிஸ்ஸா ஹட், சிறு காபி மற்றும் ஐஸ்க்ரீம் விற்பனை கடைகள் பல இயங்கி வந்தன.
இங்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியபோது, 32 ரெஸ்டாரண்டுகள் லைசென்ஸ் வாங்காமலும், தீயணைப்பு துறையிடம், ஆட்சேபனையில்லை என்பதற்கான சர்டிபிகேட் வாங்காமலும் செயல்பட்டது தெரியவந்தது.
சீல் வைப்பு
சென்னை மாநகர சட்டம் 1919, பிரிவு 6ன்கீழ் இது குற்றம் என்பதால், 32 உணவகங்களையும், அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். ரெஸ்டாரண்டுகளின் மேல், சுகாதாரத்தை பேணாத இந்த ரெஸ்டாரண்டுகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக எழுதி ஒட்டி வைத்துள்ளனர்.
பரிசீலனை
இதுகுறித்து மாநகர அதிகாரிகள் கூறுகையில், சீல் வைக்கப்பட்டதில் 6 நிறுவனங்கள் தங்கள் லைசென்ஸை மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்து காண்பித்துள்ளன. அது பரிசீலனையில் உள்ளது.
லைசென்ஸ் வாங்க முயற்சி
எஞ்சிய 26 உணவகங்கள், விரைவில் லைசென்ஸ் வாங்கி விடுவதாக கூறியுள்ளன. லைசென்ஸ்ட் ஏற்கப்படாத வரையில் ரெஸ்டாரண்டுகள் திறக்க அனுமதி வழங்கப்படாது. இவ்வாறு மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
வரவேற்பும், அதிர்ச்சியும்
சாலையோர கடைகளிலும், சிறு உணவகங்களிலும் சோதனை நடத்தி சீல் வைத்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், பெரிய இடத்திலும் கை வைத்துள்ளது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரம், இத்தனை காலமாக இதுகுறித்து எந்த சோதனையையும் நடத்தாதாமல் பாதுகாப்பின்றி உணவகங்கள் செயல்பட அனுமதித்திருந்ததும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.