ஆசிரியை சேரில் அமர்ந்து ஷூவை சரி செய்ததால் பிரம்படி.. அம்மாவைக் கட்டிப்பிடித்து கதறிய மாணவன்!
சென்னை: ஷூ லேஸ் கழன்று போனதால் குனிந்து அதை சரி செய்ய முடியாமல் தவித்த 3வது வகுப்பு மாணவன், ஆசிரியையின் இருக்கையில் அமர்ந்து அதை சரி செய்ததால் கோபமடைந்த தனியார் பள்ளி தாளாளர், சிறுவன் என்றும் பாராம் பிரம்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாலையில் பள்ளி முடிந்து தன்னை அழைத்துப் போக வந்த தாயாரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மாணவன் கதறி அழுதது அனைவரையும் நெகிழ வைத்து விட்டது.
சென்னை மந்தைவெளி 5வது குறுக்குத் தெருவில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. அங்கு குரு விக்னேஷ் என்ற 8 வயது சிறுவன் 3வது வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று மதியம் வகுப்பறையில் இருந்தபோது மாணவனின் ஷூ லேக் கழன்று விட்டது. உடனடியாக அதை சரி செய்ய முயன்றபோது குனிய முடியாமல் சிரமமாக இருந்துள்ளது.
ஆசிரியை சேரில் உட்கார்ந்ததால்
அப்போது ஆசிரியை இல்லை. இதனால் அவரது இருக்கையில் போய் அமர்ந்து குனிந்து ஷூ லேஸை சரி செய்துள்ளான் குரு விக்னேஷ். அப்போது பார்த்து ஆசிரியை மது அங்கு வந்துள்ளார். தனது சேரில் மாணவன் இருப்பதைப் பார்த்து கோபமடைந்த அவர் குரு விக்னேஷை பள்ளி தாளாளரிடம் கூட்டிச் சென்றார்.
பிரம்பால் அடித்த தாளாளர்
தாளாளர் சிவராஜ் நடந்தைதக் கேட்டார். பின்னர் தன்னிடம் இருந்த பிரம்பை எடுத்து சரமாரியாக அடித்துள்ளார். இதில் குரு விக்னேஷ் அலறித் துடித்தான். உடம்பில் சில இடங்களில் வீக்கமும் ஏற்பட்டு விட்டது.
அம்மாவைக் கட்டிப்பிடித்து கதறிய மாணவன்
வகுப்பில் அழுதபடியே மாலை வரை அமர்ந்திருந்தான் குரு விக்னேஷ். மாலையில் பள்ளி முடிந்து அழைத்துப் போக அவனது தாயார் பத்மா வந்தபோது ஓடிப் போய் தனது தாயைக் கட்டிப்பிடித்து நடந்தைதக் கூறி கதறி அழுதான் குரு விக்னேஷ். இதனால் அவனது தாயார் துடித்துப் போய் விட்டார்.
போலீஸாரின் உப்புச் சப்பில்லாத விசாரணை
உடனியாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்துக்கு மகனுடன் போன அவர் போலீஸில் தாளாளர் மீது புகார் கொடுத்தார். போலீஸார் உடனடியாக தாளார் சிவராஜை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் அனுப்பி வைத்து விட்டனர். பத்மாவிடமும், இனிமேல் இதுபோல நடக்காது என்று கூறியுள்ளனர். இதையடுத்து பத்மா வீடு திரும்பினார்.
போராட்டத்தில் குதித்த பெற்றோர்
ஆனால் நேற்று காலை குரு விக்னேஷை பள்ளியில் விட பத்மா சென்றபோது அங்கு நின்றிருந்த தாளாளர் சிவராஜ், இருவரையும் திட்டியுள்ளார். பத்மாவையும் ஒருமையில் திட்டியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த பத்மாவம் மற்ற மாணவர்களின் பெற்றோரும் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
அலட்சிய போலீஸ்
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். சிவராஜ் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் பெற்றோர்கள் சமாதானமடைந்து போராட்டத்தைக் கைவிட்டனர். இதுகுறித்து பத்மா கூறுகையில், அப்படித் தான் செய்வேன், உன்னால் முடிந்ததை பார் என்று என்னிடம் பள்ளி நிறுவனர் சிவராஜ் சவால் விடுகிறார். சம்பவம் நடந்த அன்றே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டு, சிவராஜ் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டனர்.
பாதுகாப்பு முக்கியம்
காலையில் எனது மகனை பள்ளியில் விட வந்தபோது என் மீதே போலீசில் புகார் கொடுக்கிறாயா? என்று மிரட்டியதுடன், பெண் என்றும் பார்க்காமல் ஆபாச வார்த்தையால் திட்டினார். எனவே அவர் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். இனியாவது அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.