ஒட்டுமொத்த தமிழகத்தையும் சுரண்டி சூறையாடிய கும்பல்... தலைகுனிந்து நிற்கும் தமிழகம்!
அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் என சகல தரப்பினரும் கை கோர்த்து வளைத்து வளைத்து தமிழகத்தை சுரண்டி சூறையாடிய செயலைப் பார்த்து மக்கள் திகைத்துப் போய் நிற்கிறார்கள்.
சென்னை: வரலாறு காணாத வகையில் தமிழகத்தைச் சுரண்டி நகைகளும், பணமுமாக குவித்த கும்பல் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டுள்ளது. அதிமுக வட்டாரத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும், தமிழக மக்களின் பணத்தையும், வளத்தையும் மிகப் பெரிய அளவில் சூறையாடியுள்ளனர் என்பதன் ஒரு அங்கம்தான் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், சேகர் ரெட்டி போன்றோர்.
வரைமுறையே இல்லாமல் பாரபட்சமே இல்லாமல், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைத்து மட்ட அதிகாரிகள் மிகப் பெரிய சூறையாடலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதையே ராமமோகன் ராவ் வீடுகளில் சிக்கிய தங்கக் குவியலும் சேகர் ரெட்டியின் பணம் மற்றும் தங்கக் குவியலும் வெளிக்காட்டுகிறது.
இதற்கு முன்பு கரூரில் அன்புநாதன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரது இருப்பிடங்களில் நடந்த ரெய்டுகளும் இதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மத்திய அரசு சசிகலா குரூப்புக்கு கடும் நெருக்கடி தரும் வகையில்தான் இதை அரங்கேற்றி வருகிறது என்றாலும் கூட மிகப் பெரிய சூறையாடலில் அதிமுக அரசும், அதிகாரிகளும் ஈடுபட்டனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
வளைத்து வளைத்து சுருட்டல்
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே அமைச்சர்களும், அதிகாரிகளும் வளைத்து வளைத்து சொத்துக் குவிப்பிலும், லஞ்சம் வாங்கிக் குவிப்பதிலும் படு தீவிரமாக இருந்தனர். இதுகுறித்து எத்தனையோ செய்திகள் வெளியாகின. எத்தனையோ புகார்களும் வந்தன. ஆனால் அவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே மாறிப் போனது.
நத்தம் விஸ்வநாதன்
ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில் சசிகலா உத்தரவின் பேரில் பல அமைச்சர்களின் வீடுகளில் போலீஸாரை விட்டு ரெய்டு நடத்தி பெருமளவில் பணத்தைக் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவையெல்லாம் இருட்டில் வரையப்பட்ட சித்திரமாகவே இருந்தது. எவ்வளவு எடுக்கப்பட்டது என்பது இதுவரை கணக்கில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான கோடிகள் என்று மட்டும் செய்திகள் உலா வந்தன. அவர்களில் முக்கியமானவர் நத்தம்.
பெருமளவில் முறைகேடு
நத்தம் விஸ்வநாதன் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது மிகப் பெரிய அளவில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பல கோடி அளவுக்கு இந்த முறைகேடுகள் இருந்ததாகவும் பரபரப்பு எழுந்தது. வெளிநாடுகளிலும் அவர் சொத்து வாங்கிக் குவித்ததாகவும் சர்ச்சை எழுந்தது.
அதிரடி ரெய்டுகள்
நத்தம் விஸ்வநாதன் விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தினர். ஆனால் நத்தம் இப்போது சசிகலா பக்கம் போய் விட்டார். இதேபோல காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த சில அமைச்சர்களிடமிருந்தும் கூட பெருமளவில் பணம் சிக்கியதாகவும் அப்போது பேசப்பட்டது.
கரூர் அன்புநாதன்
அதேபோல கரூர் அன்புநாதன் இருப்பிடத்தில் நடந்த அதிரடி சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. அன்புநாதன், ஓ.பன்னீர் செல்வம், சென்னை மேயர் சைதை துரைசாமி, செந்தில் பாலாஜி போன்றோருக்கு நெருக்கமானவர். நத்தம் விஸ்வநாதனுடனும் தொடர்புடையவர். அதுவும் பெரும் சர்ச்சையானது.
ஞானதேசிகன்
அதேபோல மாஜி தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வீடுகளிலும் சோதனை நடந்தது. நத்தம் விஸ்வநாதனுடன் சேர்ந்து இவரும் மின்துறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இப்போது இவர்தான் ராமமோகன் ராவை மாட்டி விட்டுள்ளதாகவும் ஒரு புதிய தகவல் பரவி வருகிறது.
பெரிய முதலை சேகர் ரெட்டி
ஆனால் இவர்களை விட பெரிய முதலையாக மாட்டியவர்தான் சேகர் ரெட்டி. மலை முழுங்கி மகாதேவன் கதையாக இருக்கிறது ரெட்டி சுட்ட பணம் மற்றும் தங்கத்தின் கதை. புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்களை கோடிக்கணக்கில் குவித்து வைத்தும், தங்கக் கட்டிகளைப் பதுக்க வைத்தும் மிகப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ரெட்டி.
ஓ.பி.எஸ் ... ஓ.பி.எஸ்
இவருக்கும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. போயஸ் கார்டனுக்கும் நெருக்கமானவர். அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பருடனும் இணைந்து பெருமளவில் மோசடி செய்தவர். இவரை ஆதரித்து அரவணைத்து அள்ளி எடுக்க வழி வகுத்துக் கொடுத்தவர்தான் ராமமோகன் ராவ்.
எங்கெங்கோ போய் குவியும் தமிழகத்தின் வளம்
தமிழகத்திலிருந்து சுரண்டிய பணத்தையும், வளத்தையும், பொருளையும் ஆந்திராவிலும், கர்நாடகத்திலும், வெளிநாடுகளிலும் குவித்து வைத்து விட்டு அதிகார மமதையோடு வலம் வந்த இந்த கும்பலைப் பார்த்து தமிழக மக்கள் திகைத்துப் போய் நிற்கிறார்கள்.
எல்லாப் பக்கமும் ஊழல்
இப்படி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, இப்போதைய ஆட்சியிலும் சரி அரசியல்வாதிகள், அவர்களின் கூட்டாளிகள், அமைச்சர்கள், அதிகாரிகள், பினாமிகள், காண்டிராக்டர்கள் என அனைவரும் கூட்டு சேர்ந்து தமிழகத்தை சூறையாடியது இதுவரை கண்டிராத மிகப் பெரிய கொடுமை. தமிழகத்திற்கு மிகப் பெரிய அவமானத்தையும், தலைக்குனிவையும் இவர்கள் தேடிக் கொடுத்துள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது.