ஆடு மேய்ப்பதை போல நடத்துகிறார்கள்.. அதிகாரிகளுடன் சேர்ந்து ஊழல்.. அதிமுக மீது பழ.கருப்பையா பாய்ச்சல்
சென்னை: ஆடுகளை மேய்ப்பதை போல தொண்டர்களை நடத்தும் கட்சியில் தொடர எனக்கு விருப்பம் இல்லை என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பழ.கருப்பையா தெரிவித்தார்.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அக்கட்சி எம்.எல்.ஏ பழ.கருப்பையா நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று இரவு அறிவித்தார்.
துக்ளக் ஆண்டு விழாவில், இன்றைய அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தின் முறைகேடுகள் குறித்து மனம் திறந்து அவர் பேசியது நீக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பேசவாய்ப்பில்லை
இதனிடையே இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா கூறியதாவது: பொதுக்குழு, செயற்குழு மட்டுமில்லை, சட்டமன்றத்திலும் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. சட்டமன்றத்தில் அரசு குறித்த விமர்சனத்தை வைப்பது முறையல்ல என்பதால், அம்மாவை (ஜெயலலிதா) நேரில் சந்தித்து பேசலாம் என்று நினைத்தேன், அதற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆடு, மாடு
ஆடுமாடுகளை மேய்ப்பதை போல தொண்டர்களை நடத்தும் முறை, எனக்கு உகந்தது இல்லை. எனவே, கட்சியில் இருந்து நீக்கிய நடவடிக்கையை முழு மனதாக ஏற்கிறேன். கட்சி கொடுத்த எம்.எல்.ஏ பதவியில் தொடருவது நெறிசார்ந்த அரசியல் இல்லை என்பதால், அப்பதவியை நான் ராஜினாமா செய்துள்ளேன்.
மனதளவில் எம்.எல்.ஏ இல்லை
பேரவை தலைவருக்கு எனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை அனுப்பிவிட்டேன். ஆனால் சபாநாயகரை சந்திக்க முடியவில்லை. சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் என்னை சந்திக்க மறுக்கிறார். அம்மா சொன்ன பிறகுதான், அவர்கள் ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன். ஆனால் என்னை பொறுத்தளவில் நான் எம்.எல்.ஏ இல்லை.
ஹெலிகாப்டரை கும்பிடுகிறார்கள்
நான், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களுடன் பழகிய 40 வருட அனுபவம் கொண்ட அரசியல்வாதி. ஆனால், எந்த விளைவுகளை பற்றியும் கவலைப்படாமல் முடிவெடுப்பது ஜெயலலிதாதான். அவரிடம் எனக்கு பிடித்த குணமும் அதுதான். ஆனால் ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடும் அளவுக்கு அமைச்சர்களே போய்விட்ட பிறகு, நாம் என்ன செய்வது என்று நெடுங்காலமாக யோசித்துக்கொண்டு இருந்தேன்.
திறமைசாலி ஜெயலலிதா
அதிமுக ஒரு வித்தியாசமான கட்சி. கட்சியிலுள்ள எல்லா மனிதர்களும் அவர்கள் போக்கிற்கு நடந்துகொள்ள அனுமதியளிக்கிறது. அதேநேரம், ஆசையின் மீது அச்சத்தை வைத்து ஜெயலலிதா கட்சியை நடத்திவிட்டார். அவர் பார்த்தாலே எல்லோரும் பயப்படும் அளவில்தான் கட்சியை வைத்துள்ளார். அது ஒரு பெரும் திறமைதான்.
ஊழல் பெருத்துவிட்டது
ஊழல் தற்போது பெருகிவிட்டது. சட்டமன்றத்தை கூட்டி, இவ்வளவு நிதி, இந்த இந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதற்கு கையெழுத்திடுவதற்குதான் ஆட்சியாளர்களுக்கு உரிமையுள்ளது. ஆனால், பணத்தை செலவு செய்ய அதிகாரிகளுக்குதான் உரிமையுள்ளது. எனவே அவர்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான், ஊழல் செய்ய முடியும். இப்போது அதிகாரிகளும், ஆட்சியாளர்களோடு சேர்ந்து ஊழல் செய்ய தொடங்கிவிட்டனர்.
தாது மணல் கொள்ளை
தமிழகத்தில் காடுகள், தாது மணல் சுரண்டல், இயற்கை வளம் சூறையாடுகிறது. அந்த வருவாய் அரசுக்கு வருவதில்லை. அந்த வருவாய் யாருக்கு போகிறது? நான் அதிமுக அரசை மட்டுமே குறை கூறவில்லை. ஆனால், சுரண்டலை ஒடுக்கும் திறமை ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். வேறு ஒரு ஆட்சியாளர்கள் தப்பு செய்ததால்தான், அதிமுகவை ஆட்சிக்கு கொண்டுவந்தனர் மக்கள். ஆனால் இங்கும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. லஞ்சத்தை ஒடுக்க முடியாவிட்டால், லஞ்சத்திற்கு வரி விதித்து அதில் இருந்தாவது நிதி பெற அரசு திட்டமிடலாம்.
மாவோயிஸ்டுகள் பெட்டர்
மாவோவாதிகள் துப்பாக்கி கலாச்சாரத்தை மட்டும் விட்டுவிட்டால், அவர்கள் கொள்கை எதற்கும் தாழ்ந்ததில்லை. காடுகள், மக்களை மாவோவாதிகள்தான் காப்பாற்றுகிறார்கள். துப்பாக்கி கலாச்சாரம் மட்டுமே நமக்கு ஒத்து வராதது. எனது இயல்பான மனப்பழக்கத்தை என்னால் மாற்ற முடியவில்லை. எனவே, அம்மா என்னை கட்சியில் இருந்து நீக்கியதும் நியாயம். அதேபோல, நான் ராஜினாமா செய்ததும் நியாயம்.
அடுத்த நடவடிக்கை
பொதுத்தொண்டு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். எதையெல்லாம் குறை என்று சொன்னேனோ அதை நிவர்த்தி செய்வோரோடு இணைந்து பணியாற்றுவேன். ஆனால், இப்போதைக்கு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து யோசிக்க என்னால் முடியவில்லை. திடீரென கட்சியைவிட்டு நீக்கியதால், விழாவில் தொலைந்து போன சிறுவன் போல முழித்துக்கொண்டுள்ளேன்.