ஜிஎஸ்டியால் ஜவுளி தொழில் முடங்கும்… பஞ்சாலை அதிபர்கள் பீதி #GSTTryst #gstrollout
இன்று நள்ளிரவு முதல் அமலாகவுள்ள ஜிஎஸ்டி ஜவுளி தொழில் முடங்கிவிடும் என்ற பீதியில் உறைந்துள்ள பஞ்சாலை அதிபர்கள், குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஜிஎஸ்டி வரியை கடுமையாக்க கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர
ஈரோடு: இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி வரி அமலாக உள்ளதால் ஜவுளி தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தமிழக பஞ்சாலை அதிபர்கள் பீதியில் உள்ளனர். அதனால் 3 மாதகால அளவுக்கு ஜிஎஸ்டி வரியை கடுமையாக்க கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் இயங்கி வருகின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்த ஆலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.
ஜிஎஸ்டி வரி இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ளதால் ஜவுளி தொழிலின் எதிர்காலம் என்ன என்பது தெரியாமல் இருப்பதாகவும் இப்போதே தொழில் முடக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் பஞ்சாலை அதிபர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொழில் முனைவோர்களின் அணுகுமுறை, உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லும் முறைகள் ஆகியவை குறித்து சரியான சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்திய பின் ஜிஎஸ்டி அமல் படுத்த வேண்டும் எனவும், குறைந்தபட்சம் மூன்று மாத காலத்திற்காவது இதனை கடுமையாக்காமல் பஞ்சாலை நிறுவனங்களுக்கு சலுகை தர வேண்டும் பஞ்சாலை அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.