காவிரி பிரச்சினைக்காக தமிழக எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வார்களா?
காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக தமிழக எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க பிரதமர் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க தமிழக எம்பி.க்கள் தங்கள் பதவியை தூக்கி எறிவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் கர்நாடகம், தமிழகம் இடையே நிலவி வரும் காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினையை தீர்த்து வைக்க முனைப்பு காட்டியதே இல்லை என்பது பொதுமக்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தமிழகத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு சாதகமான மற்றும் பாதகமான தீர்ப்பை தந்துள்ளதாகவே மக்கள் கூறி வருகின்றனர்.
பாதகம் எது
காவிரி நதியை எந்த ஒரு மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழகத்துக்கு சாதகமானதாகும். அதே வேளை நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வழங்கியதை காட்டிலும் குறைந்த அளவு நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது, பாதகமானதாகும்.
கர்நாடக அரசு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக் கொள்ள முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவையும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் இதுவரை கர்நாடக அரசு பின்பற்றியதே இல்லை.
தமிழக அரசியல் கட்சிகள்
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது , அனைத்து கட்சித் தலைவர்களும் பிரதமரை சந்திப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்காக அந்த மாநிலத்தை பகைத்து கொண்ட காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைப்பது என்பது சந்தேகம் என்று எதிர்க்கட்சிகளும், தமிழக மக்களும் கருதுகின்றனர்.
மறுப்பு
இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்த ஸ்டாலினுக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார். அப்போது காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தமிழக மக்களுக்கு கிடைத்த அவமானம் என்று ஸ்டாலின் கொந்தளித்துவிட்டார்.
அனைத்து எம்பிக்களும்...
தமிழகத்திலிருந்து மக்களவைக்கு பாமக சார்பில் அன்புமணி ராமதாஸும், பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணனும், அதிமுக சார்பில் 37 எம்பிக்களும், புதுவை சார்பில் ஒருவரும் உள்ளனர். பொன்னாரை தவிர்த்து தமிழகம் , புதுவையின் 39 எம்பிக்களும் மக்களுக்காக ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பரா என்பது கேள்வியாக உள்ளது.
விவசாயிகள்
மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காகவும், தமிழக விவசாயிகள் நலனுக்காகவும் ராஜினாமா செய்வதில் தவறில்லை. இது மக்கள் மனதில் ஒரு நம்பிக்கையும் மென்மையான போக்கையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.