கவுன்சிலர் சீட் ரூ.20 லட்சத்திற்கு ஏலம்... அதிகாரிகள் விசாரணையில் திடுக் தகவல்
திருநெல்வேலி: புளியங்குடி நகராட்சி கவுன்சிலர் பதவி 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனதாக தகவல் பரவியதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. அதிமுகவை சேர்ந்த முன்னாள் நகராட்சி தலைவரை சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு வார்டில் கவுன்சிலராக போட்டியின்றி தேர்வு செய்ய இரவு 9 மணி அளவில் ஊர் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் நகராட்சி தலைவரை தங்கள் வார்டில் கவுன்சிலராக போட்டியின்றி தேர்வு செய்ய ரூ.20 லட்சம் வரை ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் மற்றும் எஸ்பிக்கு புகார் பறந்ததையடுத்து, கலெக்டர் கருணாகரன் உத்தரவின் பேரில் கடையநல்லூர் தாசில்தார் நாகராஜன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், புளியங்குடி இன்ஸ்பெக்டர் ரகுராஜன் ஆகியோர் இரவு ஊர் கூட்டம் நடந்த சிந்தாமணிக்கு விரைந்தனர். அங்கு ஊர் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் நிர்வாகிகளோ கவுன்சிலர் பதவிக்கு ஏலம் நடக்கவில்லை என்றும், கோவில் திருவிழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக கூட்டம் நடந்ததாகவும் தெரிவித்தனர்.
நடந்த சம்பவம் தொடர்பாக கடையநல்லூர் தாசில்தார் நாகராஜன் கூறுகையில், சிந்தாமணி பகுதியில் அதிமுக பிரமுகருக்கு ஆதரவாக வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஏலம் நடப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் விசாரணை நடத்தினோம். ஊர் நிர்வாகிகள் வேறு நிகழ்ச்சிக்காக கூடியதாக சொல்கிறார்கள். ஆனாலும் உள்ளாட்சி தேர்தலில் ஏலம் மற்றும் பேரம் நடக்காமல் இருக்க தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கவுன்சிலர் பதவிகளுக்கு ஏலம் விடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.