ஜூலை 30, 31-இல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு அறிவிப்பு
ஜூலை 30, 31-ஆம் தேதிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு அறிவிக்கப்பட்டது.
சென்னை: ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மருத்துவ கல்விக் கூடுதல் இயக்குநர் மருத்துவர் செல்வராஜன் அறிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி காலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் தொடங்கியது.
முதல் நாளில் சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளிகள் பிரிவு, ராணுவ வீரர்களின் பிள்ளைகள், விளையாட்டு வீரர்கள் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. 7-ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.
அரசு இடங்களுக்கு கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் எம்பிபிஎஸ் , பிடிஎஸ் படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 30, 31-இல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதை மருத்துவ கல்விக் கூடுதல் இயக்குநர் மருத்துவர் செல்வராஜன் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.