பி.எஸ்.எல்.வி.சி- 31 'கவுண்ட்டவுன்' தொடங்கியது- புதன்கிழமை 'சர்ர்'
சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் செலுத்தப்படவுள்ள பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்கியுள்ளது.
கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 இ என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் வரும் 20 ஆம் தேதி புதன்கிழமையன்று விண்ணில் ஏவப்படுவதையொட்டி அதற்கான "கவுண்ட்டவுன்" இன்று தொடங்கியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 4 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.
இப்போது 5 ஆவது செயற்கைகோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1ஐ பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுமையத்தில் இருந்து 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
இதற்காக எரிபொருள்கள் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்நிலையில் தற்போது இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் ராக்கெட்டை ஏவுவதற்கான 48 மணி நேர "கவுண்ட்டவுன்" இன்று தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு இஸ்ரோவின் முதல் லான்ச் இது என்பது குறிப்பிடத்தக்கது.