புலிகளைக் கணக்கெடுக்கப் போறாங்க.. களக்காடு, முண்டந்துறைக்கு யாரும் போகாதீங்க...!
நெல்லை: களக்காடு- முண்டத்துறை புலிகள் சரணாலயத்தில் புலிகளைக் கணக்கெடுக்கும் இன்று துவங்குகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து களக்காடு புலிகள் காப்பக இயக்குனர் மித்தா பானாஜி கூறுகையில், இந்திய அளவில் புலிகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதன்படி களக்காடு மு்ண்டத்துறை புலிகள் காப்பகத்தில் இப்பணிகள் இன்று தொடங்குகிறது.
இந்த கணக்கெடுப்பில் புலிகள், சிறுத்தை, ஊண் உண்ணிகள், மற்றும் தாவர உண்ணிகளான காட்டு மாடு, மான் உள்ளிட்ட இதர உயிரினங்கள் இருப்பது பற்றி கணக்கெடுக்கப்படும்.
இதற்காக களக்காடு மற்றும் அம்பாசமுத்திரம் கோட்டங்களில் உள்ள 30 பீட்டுகளில் சுமார் 2 கிலோ மீட்டர் வரை நேர் கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு இன்று முதல் 21ம் தேதி வரை அனைத்து பீட்டுகளிலும் புலிகள் மற்றும் மான்கள் கணக்கெடுப்பு நடக்கிறது.
22 மற்றும் 23ம் தேதிகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் ஒருங்கிணைக்கப்படும்.
இந்த பணியை முன்னி்ட்டு களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகத்தில் இன்று முதல் 21ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
புலிகள் கணக்கெடுப்பு பணி 4 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்ட பணியில் தகவல் சேகரித்தல், 2ம் கட்ட பணியில் செயற்கைக்கோள் உதவியுடன், 3ம் கட்டமாக புகைப்படம் எடுத்தல் ஆகியவை நடக்கும்.
4ம் கட்டமாக டிசம்பரில் கணக்கெடுப்பு முடிந்த பின் இந்திய அளவில் புலிகள் எண்ணிக்கை கணக்கிடப்படும் என்றார்.