செங்கோட்டை அரசு பஸ் டிப்போவில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது!
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக டிப்போவில் திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டை, புளியரையில் அரசு விரைவு போக்குவரத்து கழக டிப்போ உள்ளது. இந்த டிப்போவில், உள்ள ஓய்வறையில் திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதனால் பஸ் ஊழியர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, டிரைவராக பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்டதால், டீசல் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். அவரது துணிமணிகள் இருந்த பெட்டியில்தான் குண்டு வெடித்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஊழியருக்கு விவசாய நிலம் உள்ளது. அங்கு பன்றிகள் தொல்லை அதிகம். இதைத் தடுக்க அவர் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளார். பாதுகாப்புக்காக டிப்போவில் கொண்டு வந்து வைத்துள்ளார் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிப்போவில் வெடித்தது நாட்டு வெடிகுண்டுதான் என்று காவல்துறை விளக்கியுள்ளது.