குமரி, தூத்துக்குடியில் சர்வசாதாரணமாக நடமாடும் நாட்டு வெடிகுண்டுகள்... பீதியில் மக்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் அரிவாள் கலாச்சாரம் சற்றே ஓய்ந்துள்ள நிலையில் நாட்டு வெடிகுண்டுகள் தற்போது சர்வசாதரணமாக உலா வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்கொலைகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தூத்துக்குடி அருகே சாலையோரத்தில் நாட்டு வெடிகுண்டுகள் சர்வசாதரணமாக கிடந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் பீதியில் ஆழ்த்தியது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே நயினார்பத்தில் நடுரோட்டில் சணலால் சுற்றப்பட்ட பார்சல் கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மெஞ்ஞானபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பார்சல் வெடிகுண்டு
இதுகுறித்து அவர்கள் நெல்லை, தூத்துக்குடி வெடிகுண்டு தடுப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் நயினார்பத்துக்கு விரைந்து வந்தனர்.
அந்த பார்சலை கைப்பற்றிய அவர்கள் அதை சோதனையிட்டதில் அதில் நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று அழித்தனர்.
நாட்டு வெடிகுண்டு எப்படி
திருவிழா, சடங்கு, திருமணம் கொடை விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வானவெடிகளை விற்பனை செய்ய குரும்பூரில் சிலர் உரிமம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதில் உரிமம் இல்லாமல் வெடிபொருட்களை விற்பனை செய்பவர்களை சிக்க வைக்க யாராவது நாட்டு வெடிகுண்டு பார்சலை நயினார்பத்தில் வீசி சென்றார்களா அல்லது திருவிழாவுக்காக வாங்கி சென்றவர்களிடமிருந்து தவறி அது கீழே விழுந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் உடன்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்பீதியை வரவழைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
வாளியில் நாட்டு வெடிகுண்டுகள்
இதேபோல குளச்சல் நகர காங்கிரஸ் தலைவரான சபீன் வீட்டருகே வாளியில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் வாளி ஒன்றினை கையில் வைத்து கொண்டு சபீன் வீட்டருகே சுற்றி திரிந்தனர்.
காங்கிரஸ் பிரமுகருக்கு குறி
அப்போது துறைமுகப் பகுதியைச் சேர்ந்த 2 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்காக அந்த வழியாக வந்தனர். மீனவர்களை பார்த்ததும், சபீன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த 2 பேரும் பதுங்கினார்கள். அவர்களிடம் இங்கே எதற்கு நிற்கிறீர்கள்? என மீனவர்கள் விசாரித்தனர்.
வாளி வெடிகுண்டு
சபீன் வீட்டிற்கு மீன் கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர் கையில் இருந்த வாளியை சபீன் வீட்டு வாசலில் வைத்து விட்டு மோட்டார் சைக்கிளில் அவர்கள் 2 பேரும் புறப்பட்டுச் சென்றனர்.
சந்தேகம் அடைந்த மீனவர்கள் அந்த வாளியை எடுத்து பார்த்தனர். வாளியில் மணல் நிரப்பப்பட்டு அதில் நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பார்த்து மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக குளச்சல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
வெடிகுண்டு நிபுணர்கள்
தகவலின் பேரின் அங்கு சென்ற போலீசாரும் வெடிகுண்டு நிபுணர் குழுவினரும் வாளியில் இருந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போலீஸ் நிலையத்தில் மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு வெடிகுண்டுகள் இருந்த வாளி அதன் நடுவே வைக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டை செயலிழக்க செய்வதற்காக நெல்லையில் இருந்து நிபுணர் குழுவினர் குளச்சல் விரைகின்றனர். அவர்கள் வந்த பிறகு வெடிகுண்டு செயல் இழக்க செய்யப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மர்ம நபர்கள் யார்?
வெடிகுண்டு யாருக்காக வைக்கப்பட்டது. மர்மநபர்கள் யார்? வெடிகுண்டு வைக்க காரணம் என்ன பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தென்மாவட்டங்களில் மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்னர் இவற்றை போலீசார் தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.