குப்பை தொட்டியில் நாட்டு வெடிகுண்டு… கோவில்பட்டியில் பரபரப்பு
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நகராட்சி குப்பை வண்டியில் வெடிகுண்டு கிடந்தது. அதை வெடிக்கும் முன் போலீசார் கைப்பற்றியதால் ஊழியர்கள் உயிர் தப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் முருகன் (49), சுந்தர் (40). இவர்கள் இருவரும் நேற்று காலை தள்ளுவண்டியில் செல்லப்பாண்டி நகர், ஆழ்வார் தெரு ஆகியவற்றில் சேர்ந்திருந்த குப்பைகளை வண்டியில் அள்ளினர்.
பின்னர் அவற்றை மில் தெருவில் உள்ள காலியான இடத்தில் கொண்டு வந்து குவித்தனர். அங்கிருந்து அவைகளை லாரியில் வேறு இடத்திற்கு எடுத்துச்செல்வது வழக்கம்.
இருவரும் குப்பையை தட்டிய பின் வண்டியை அங்கு நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றனர். திரும்பி வந்தபோது வண்டிக்குள் துணியால் சுற்றப்பட்ட ஒரு பொருள் கிடப்பதை கண்டனர். இதனால் பதறிப்போன அவர்கள் உடனே நகராட்சி நிர்வாகத்திற்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்தனர்.
அந்த துணி பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் நாட்டு வெடிகுண்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக வெடிகுண்டு மீது தண்ணீர் ஊற்றி அதை ஒரு வாளியில் எடுத்துச் சென்றனர்.
வெடிகுண்டை குப்பை வண்டியில் போட்டது யார், எதற்காக போட்டார்கள் என விசாரணை நடக்கிறது. வெடிகுண்டை சோதிக்க தூத்துக்குடியில் இருந்து வெடிகுண்டு நிபுணர் வரவழைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.