கணவன்- மனைவிக்கு வெட்டு.. 1 பவுன் நகையுடன் தப்பி ஓடிய முகமூடித் திருடன்
சென்னை: சென்னை தாம்பரம் அருகே இரவில் பைக்கில் வந்த கணவன், மனைவியை வெட்டி விட்டு அந்தப் பெண் அணிந்திருந்த ஒரு பவுன் நகையைத் திருடிக் கொண்டு முகமூடித் திருடன் தப்பிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழலில் வசித்து வருபவர் மூர்த்தி. இவரது மனைவி பெயர் காய்த்ரி. இவர்களுக்கு 12 வயதில் சஞ்சய் குமார் என்ற மகன் உள்ளார். காயத்ரியின் தாயார் தாம்பரம் புலிக்கொரடு பகுதியில் வசித்து வருகிறார். இவரைப் பார்க்க நேற்று கணவர், மகனுடன் காலையில் தாம்பரம் வந்தார் காயத்ரி.
பின்னர் இரவு 9 மணியளவில் பைக்கில் தங்களது வீட்டுக்குக் கிளம்பினர். மதுரவாயல் பைபாஸ் சாலையில் ஏறுவதற்காக ஒற்றையடி பாதை வழியாக பாலம் உடைக்கப்பட்டுள்ளது. அதில் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டுதான் போக முடியும். எனவே காயத்ரியும், சஞ்சய் குமாரும் மேலே ஏறிப் போய் நின்றனர். மூர்த்தி பைக்கை தள்ளிக் கொண்டு வந்தார்.
அப்போது முகமுடி அணிந்த ஒரு நபர் திடீரென பைக்கில் அங்கு வந்தார். காயத்ரி கழுத்தில் கத்தியை வைத்து நகையைக் கழற்றித் தருமாறு மிரட்டினார். ஆனால் காயத்ரி முடியாது என்று கூறியதுடன் உதவி கேட்டு கணவரை அழைத்தார். இதைப் பார்த்த திருடன் காயத்ரியின் கையில் கத்தியால் வெட்டினான். இந்த நிலையில் மூர்த்தி வேகமாக மேலே வந்தார். அவர் திருடனை நோக்கி ஓடி வந்து தடுக்க முயன்றபோது, திருடன், மூர்த்தியின் தாடையில் கத்தியால் வெட்டி விட்டு கையில் கிடைத்த ஒரு பவுன் நகையுடன் ஓடி விட்டான்.
இந்த நிலையில் சிறுவன் சஞ்சய் குமார் அங்கிருந்து ஓடி தனது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தான். அவர்கள் போலீஸுக்குத் தகவல் தந்தனர். போலீஸார் விரைந்து வந்து காயத்ரி, மூர்த்தியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.