வீடு வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி.. கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற தம்பதி!
12 லட்சம் ரூபாய் மோசடி செய்ததால் தம்பதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
கோவை: வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ. 12 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் தம்பதி ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த ஜெயகுமார் மற்றும் சுகுனா தம்பதி. அதே பகுதியை சேர்ந்த திருமேணி என்பவர்கள் இவர்களிடம் வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி உள்ளார். மேலும் அதே பகுதியில் வீடு தேவையானவர்களுக்கும் வாரியம் மூலம் வீடு வாங்க ஏற்பாடு செய்து தருவதாக கூறி உள்ளார். இதனை நம்பி ஜெயகுமார் மற்றும் சுகுனா தம்பதி அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் வசூல் செய்து திருமேணியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் , வீட்டு வாசதி வாரியத்தில் வீட்டு வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த பணத்தை ஜெயகுமாரை கொடுக்குமாறு வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த தம்பதி, மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு தரக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உடம்பில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் இருவரையும் மீட்டு காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மனு நாளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.