சாப்பாடு போடாமல் மிரட்டுவதாக ‘வக்கீல்’ மகன் மீது பெற்றோர் புகார்
சென்னை: சாப்பாடு போடாமல் கொடுமைப் படுத்துவதோடு, கொலை மிரட்டல் விடுப்பதாக தங்களது வழக்கறிஞர் மகன் மீது வயதான பெற்றோர் நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
சென்னை தரமணியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (72). இவரது மனைவி ஓமனா (70). இத்தம்பதி நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் தங்கள் மகன் தங்களுக்கு சாப்பாடு போடாமல் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இத்தம்பதியினருக்கு அப்பகுதியில் இரு வீடுகள் உள்ளனவாம். அதில் பெரிய வீட்டை, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும், தங்கள் மகன் ராமகிருஷ்ணன் மீது எழுதி வைத்துள்ளனர். இன்னொரு வீட்டிலிருந்து கிடைக்கும் வாடகை பணத்தில், பெற்றோர் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த வீட்டையும் தனக்கு எழுதி தர வேண்டும் என ராமகிருஷ்ணன் மிரட்டுவதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர் பெற்றோர். மேலும், வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை விரட்டி விட்டு, வாடகைக்கு வருகிறவர்களை தடுத்து வருவதாகவும் இதனால் தங்களது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தங்கள் மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கூறியுள்ளனர்.