ரயிலை பிடிக்கும் அவசரத்தில் பெத்த குழந்தையை பிளாட்பாரத்தில் விட்டுச் சென்ற பெற்றோர்!
ரயிலில் சீட்பிடிக்க குழந்தையை பிளாட்பாரத்தில் பெற்றோர் தவறவிட்டுவிட்டனர்.
நாகர்கோவில்: இப்படிக்கூடவா இருப்பார்கள்? என்பதை சொல்லும் நாகர்கோவில் செய்திதான் இது.
நாகர்கோவில் ரயில்நிலையம்... பரபரப்பு நிறைந்த நேற்றுமுன்தின மாலை நேரம். பெட்டி படுக்கைகளுடன் நெரிசல்களில் அவசர அவசரமாக மக்கள் கூட்ட தலைகள்... ரயில்நிலையத்தில் சென்னை செல்ல வேண்டிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலான சரியான நேரத்தில் புறப்பட்டது.
புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த பிளாட்பாரத்தில் 5 வயதுடைய குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. அதனை பார்த்த பயணிகளோ, குழந்தையை அழைத்து செல்ல யாராவது வருவார்கள் என்று சற்று நேரம் அங்கேயே நின்று, சுற்றுமுற்றும் பார்த்தனர். யாருமே வரவில்லை. குழந்தையோ அழுகையை நிறுத்தவில்லை. இதனால், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் பயணிகளே குழந்தையை அழைத்து சென்று ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசாரோ, அந்த குழந்தையை அழைத்துக் கொண்டு 1-வது பிளாட்பாரத்தில் நின்று போவோர் வருவோர்களை விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது, புறப்பட்டு சென்று கொண்டிருந்த அந்த ரயிலானது, அபாய சங்கலியால் இழுக்கப்பட்டு நின்றது. ரயில் நின்றதும் அதிலிருந்து ஒரு தம்பதி அரக்க பறக்க பிளாட்பாரம் நோக்கி பதறியடித்து வேகமாக ஓடி வந்தனர். முதல் பிளாட்பாரத்திலேயே போலீசார் குழந்தையுடன் நின்றிருந்ததை கண்டதும், அந்த பெண் ஐயோ, என் குழந்தை... என் குழந்தையை கொடுங்கள் என வாங்கினார்.
பின்னர் தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரயில் கிளம்பிவிட்டதால், கணவனிடத்தில் குழந்தை இருக்கும் என மனைவியும், மனைவிதான் குழந்தையை வைத்திருப்பாள் என கணவனும் நினைத்து தனித்தனி பெட்டிகளில் ஆளுக்கொருவர் ஏறி உள்ளனர்.
கடைசியில் ரயிலை பார்த்ததும் அவசரத்தில் குழந்தையை பிளாட்பாரத்திலேயே விட்டு சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து தம்பதிக்கு கண்டிப்பு கலந்த அறிவுரையை கூறி குழந்தையை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் காரணமாக கொஞ்ச நேரத்தில் ரயில்நிலையமே பரபரப்பாக காணப்பட்டது.