11 மாத இரட்டை பெண் குழந்தைகளை கொன்று, அரசு பள்ளி ஆசிரியை, கணவருடன் தற்கொலை.. அவினாசியில் சோகம்!
திருப்பூர்: திருப்பூர் அருகே இரட்டை குழந்தைகளுடன் பெற்றோர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி குருந்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பங்குச் சந்தை தொழிலும், பழக்கடையும் நடத்தி வந்தார். இவரது மனைவி சுதா. கருக்கம்பாளையம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கு 11 மாதங்களுக்கு முன்பு, விவிதா மற்றும் விசிதா என்று இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
அண்டை வீட்டார் சந்தேகம்
இந்த நிலையில், இன்று அதிகாலையோ அல்லது நேற்று இரவோ, குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று, தம்பதிகள் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இன்று காலை வெகுநேரமாகியும், செந்தில்குமார் வீட்டு கதவு திறக்கவில்லை என்பதால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டுக்குள் பார்த்தபோது, இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
மக்கள் சோகம்
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உயிரிழந்தோர் சடலங்கள் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பங்குச் சந்தை நஷ்டம்
பங்குச் சந்தை வர்த்தகத்தில் செந்தில்குமாருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே முதலீடு செய்ய முடியாமல் பழக்கடையிலும் வருமானம் பறிபோயுள்ளது. இதனால் செந்தில்குமார் கடந்த 8 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
பல கோணங்களில் விசாரணை
செந்தில்குமாருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. கடன் வாங்கி குவித்துள்ளார். இதுபோன்ற காரணங்களால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகராறு மற்றும் பிரச்சினை காரணமாக குழந்தைகளை கொலை செய்துவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கந்துவட்டி பிரச்சினை அதிகரித்துள்ள நிலையில், இந்த தற்கொலையும் அத்தோடு தொடர்புள்ளதாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.