நீதிபதிகள் ஓய்வு வயதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது: சென்னை ஹைகோர்ட்
சென்னை: நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உடல் தகுதி அடிப்படையில் நிர்ணயிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் ஓய்வு வயதை சட்டம்தான் தீர்மானிக்குமே தவிர நீதிமன்றங்கள் அல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.பி.ஆர் .மேனன் தாக்கல் செய்த மனுவில், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 என்பதற்கு பதிலாக உடல்தகுதி அடிப்படையில் வயதை நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான முதல் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, ஓய்வு பெறும் வயதை நிர்ணயிப்பது நீதித்துறையின் எல்லைக்குள் இல்லை.. அது சட்டரீதியாக விவாதித்து முடிவு செய்யப்பட வேண்டியது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் நீதிபதி பணியிடம் நிரப்புதல் என்பது பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் தொடர்புடையது.. இதற்கும் ஓய்வு பெறும் வயதுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இதில் நீதிமன்றம் எதுவும் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி பெஞ்ச் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.