பஸ் கட்டண உயர்வில் தலையிட முடியாது.. சென்னை ஹைகோர்ட் தடாலடி
பஸ் கட்டண உயர்வு எதிரான வழக்கில், அரசு நிர்வாக முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: பேருந்து கட்டண உயர்வு தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு நிர்வாக முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிய பேருந்து கட்டண உயர்வு கடந்த 20ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. கடந்த 6 ஆண்டுகளில் டீசல் விலை 50 சதவீதம் உயர்ந்திருப்பதால், பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. அரசின் இந்த கட்டண உயர்வு சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மிகவும் பாதித்துள்ளது. 10 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்த பயணிகள் தற்போது 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இந்த கட்டண உயர்வு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினரும், மாணவர்களும், அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பல்வேறு பொருட்களின் விலை தொடர்ந்து உயர்கிறது ஒவ்வொன்றிலும் எப்படி நீதிமன்றம் தலையிட முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் கட்டண உயர்வு என்பது அரசு நிர்வாக முடிவு என்றும் அதில் நீதிமன்றம் தலையிட இயலாது என்றும் நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தலையிட மறுப்பு தெரிவித்தனர்.