நஷ்ட ஈடு கொடுக்காமல் டிமிக்கி.. அரசு பஸ்சை மடக்கிய நீதிமன்ற ஊழியர்கள்!
விபத்தில் சிக்கியவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் டிமிக்கி கொடுத்த அரசு போக்குவரத்து கழக பஸ்சை கோர்ட் உத்தரவுப்படி ஊழியர்கள் வழிமறித்து ஜப்தி செய்தனர்.
நெல்லை: விபத்தில் சிக்கியவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் டிமிக்கி கொடுத்த அரசு போக்குவரத்து கழக பஸ்சை கோர்ட் உத்தரவுப்படி ஊழியர்கள் வழிமறித்து ஜப்தி செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜானோ. இவர் கடந்த ஆண்டு நாகர்கோவிலுக்கு பைக்கில் சென்றபோது அரசு பஸ் மோதி முகம் சிதைந்தது. இதனால் அவர் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இதுபோல் அதே பகுதியை சேர்ந்த சந்திரா என்பவர் மீது அரசு பஸ் மோதியதில் வலது கை துண்டானது. அவரும் வேலைக்கு செல்ல முடியாமல் திண்டாடி வருகிறார். இதனால் நஷ்ட ஈடு கேட்டு அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடரந்தனர்.
ஆனால் அரசு போக்iகுவரத்து கழகம் சார்பில் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர் ஜானோவிற்கு ரூ.17 லட்சமும், சந்திராவுக்கு 7 அரை லட்சமும் நஷ்ட ஈடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்து கழகம் இரண்டு பேருக்கும் நஷ்ட ஈடு வழங்கவில்லை.
இதனால் பொறுத்து பார்த்த இருவரும் அரசு போக்குவரத்து கழகத்தின் செயலை கண்டித்து மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்த நீதிபதி அரசு போக்குவரத்து கழகத்தை கண்டித்ததோடு அரசு பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி மாலை கோர்ட் அமீனா நெல்லை புதிய பஸ் நிலையம் வந்தார். இதை பார்த்த அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் பஸ்சை வேகமாக கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் வழிமறித்து மடக்கிய அமீனா நாகர்கோவில் கோட்டத்தை சேர்ந்த மூன்று பஸ்களை ஜப்தி செய்தார்.
பஸ்சின் முன்பகுதியில் ஜப்தி நோட்டீஸ் ஓட்டப்பட்டது. இதனை பார்த்து டிரைவர்கள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டு பணிமனைக்கு திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அங்கு போக்குவரத்து கழக அதிகாரிகளை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.