சுவாதி கொலை: ராம்குமாருக்கு ஆகஸ்ட் 1 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ராம்குமாரின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 1ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலம் எழும்பூர் 13வது குற்றவியல் நீதிபதி கோபிநாத் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட ராம்குமாருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் சுவாதி கொலை செய்யப்பட்டர். இந்த கொலை தொடர்பாக செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தர். கடந்த 13ம் தேதி முதல் 15 தேதி வரை போலீசார் ,ராம் குமாரிடம் விசாரணை நடத்தினார்.
ராம் குமாரின் 15 நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடி வடைந்தது. காவலை நீட்டிப்பதற்காக ராம்குமாரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர்.
கடந்த முறை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட போது, ஏராளமான பத்திரிகையாளர்கள், நீதிமன்றத்தில் திரண்டனர். ராம் குமாரை பார்க்க பொது மக்கள் முண்டியடித்தனர். இதனால் ராம்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பத்திரமாக அழைத்து செல்வதற்கு போலீசார் பெரிதும் சிரமப்பட்டனர்.
இதனை கருத்தில் கொண்டு புழல் சிறையில் இருக்கும் ராம்குமாரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தி அவரது காவலை நீட்டிக்க எழும்பூர் நீதிபதி திட்டமிட்டார். எழும்பூர் 13வது குற்றவியல் நீதிபதி கோபிநாத் முன்பு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ராம்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். ராம்குமாரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, ஆகஸ்ட் 1 வரை காவலை நீடித்து உத்தரவிட்டார்.