பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: ‘அட்டாக்’ பாண்டிக்கு பிடிவாரண்ட்!
திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ் மதுரையில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில், கைது செய்யப்பட்ட 17 பேர் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். வழக்கில் பிரதான குற்றவாளியாக உள்ள அட்டாக் பாண்டி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை சுப்பிரமணியபுரம் போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கு நடைபெறும் மதுரை 4-ஆவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், அட்டாக் பாண்டிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்குமாறு சுப்பிரமணியபுரம் போலீஸார் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், அட்டாக் பாண்டிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
இந்த வழக்கில் தனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்றும், தன்னை போலீசார் தேடி வருவதாக தெரிகிறது என்றும் அட்டாக் பாண்டி முன்ஜாமீன் கோரி புதன்கிழமையன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.