தனியார் பால் கலப்படம் பற்றி பேசக் கூடாது... அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஹைகோர்ட் வாய் பூட்டு!
தனியார் பால் கலப்படம் குறித்து பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை : தனியார் பால் கலப்படம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 24ம் தேதி தனியார் பாலில் ரசாயன கலப்படம் செய்யப்படுவதாகவும், குழந்தைகள் அதிகம் அருந்தும் பால் பொருளிலேயே கலப்படம் என்று அமைச்சரே கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் பால் மாதிரிகள் புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பரிசோதனை மையத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.
இந்நிலையில் ஹட்சன், டோக்லா, விஜய் டைரி உள்ளிட்ட நிறுவனங்கள் அமைச்சரின் பேச்சுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன. உயிருக்கு ஆபத்தான கலப்படம் இல்லை, தரம் குறைந்தவையாக மட்டுமே பால் உள்ளது என்றும் ஒரு வழக்கில் அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதை சுட்டிக்காட்டிய தனியார் பால் நிறுகூனங்கள் உரிய ஆதாரங்களின்றி அமைச்சர் தனியார் நிறுவன பால் குறித்து பேச தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தன.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், ஆதாரமில்லாத குற்றச்சாட்டை அமைச்சர் முன்வைக்கக் கூடாதும் என்று அவர் பால் கலப்படம் குறித்து பேச தடை விதித்தும் உத்தரவிட்டார். மேலும் 4 வாரத்திற்குள் இந்த வழக்கில் அமைச்சர் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.