அரசு கேபிள் டிவி தொடர்பான அவதூறு வழக்கு.. ராமதாஸ் நேரில் ஆஜராக சம்மன்!
சென்னை: அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரில் ஆஜராக வேண்டும் என்று செசன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கழகத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் சார்பில் மாநகர அரசு வக்கீல், 2 கிரிமினல் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஒரு வழக்கில், ‘பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் பேட்டி மாலை பத்திரிகை ஒன்றில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி வெளியானது.' ‘அரசு கேபிள் டி.வி. கழகம், தனியார் டி.வி. சேனலுக்கு சலுகை அளித்தது எப்படி? என்ற தலைப்பில் வெளியான அந்த செய்தியில், மிகவும் அவதூறான கருத்துக்களை ராமதாஸ் தெரிவித்துள்ளார். இவர் தெரிவித்த கருத்துக்களால், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது' என்று கூறியிருந்தார்.
மற்றொரு மனுவில், ‘ஏப்ரல் 16-ந் தேதி ஒரு காலை நாளிதழில், அரசு கேபிள் டி.வி. கழகத்தில் பல கோடி ஊழல்' என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள அனைத்து கருத்துக்களும் உண்மைக்கு புறம்பானது. எனவே, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், செய்தி வெளியிட்ட நாளிதழ்களின் ஆசிரியர் ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்
இந்த வழக்குகள் இரண்டையும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன், இந்த வழக்குகளின் ஆவணங்களை பெறுவதற்காக டாக்டர் ராமதாஸ் வருகிற ஜூன் 22ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்' என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.