மகாபாரதம் குறித்து அவதூறு பேச்சு… மே 5ல் கோர்ட்டில் ஆஜராக நடிகர் கமலுக்கு உத்தரவு
மகாபாரதம் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் மே 5ம் தேதி நடிகர் கமலஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என்ற வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.
வள்ளியூர்: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மகாபாரதம் குறித்து நடிகர் கமலஹாசன் பேசினார். அப்போது மகாபாரத்தில் பெண்களின் நிலை எப்படி இருந்தது என்பது பற்றி பேசினார்.
இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தையும், இந்துக்களின் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி பேசியதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின.
கமல் மகாபாரதத்தை அவமானப்படுத்திவிட்டார் என்று இந்து அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்தன. அவருக்கு எதிரான போராட்டங்களை நடத்தின.
வழக்கு
இந்நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பழவூரைச் சேர்ந்தவர் ஆதிநாத சுந்தரம். பக்கத்து ஊரான அஞ்சுகிராமத்தில் வியாபாரம் செய்து வரும் இவர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
நடவடிக்கை
அந்த மனுவில், "கடந்த மாதம் 12-ந்தேதி தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் கமலஹாசன் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுப்படுத்தி அவதூறாக பேசியுள்ளார். எனவே நடிகர் கமலஹாசன் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
அறிக்கை தாக்கல்
மனுவை ஏற்றுக்கொண்ட வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் கமலஹாசனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடிகர் கமலஹாசன் மீதான புகாரை விசாரித்து இது தொடர்பாக பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கமல் ஆஜர்
இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது. அதில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாத பாவூர் காவல்நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வரும் மே மாதம் 5ம் தேதி நடிகர் கமலஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.