பொட்டு சுரேஷ் கொலை வழக்கு... அட்டாக் பாண்டி ஜாமீன் மனு தள்ளுபடி
திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதுரை: திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிறையில் உள்ள அட்டாக் பாண்டி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்தது.
மதுரை, அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் பொட்டு சுரேஷ். இவர் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்தார். அத்துடன் திமுக தென் மண்டல அமைப்புச் செயலராக இருந்த மு.க. அழகிரிக்கு நெருக்கமானவராவார். இவரை கடந்த 2013 -ஆம் ஆண்டு மர்மக் கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து, அழகிரியின் மற்றொரு ஆதரவாளருமான அட்டாக் பாண்டி உள்ளிட்ட 14 பேரைத் தேடி வந்தனர். அவர்களுள் 7 பேர் சரணடைந்தனர். மேலும் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டியை பிடிக்க போலீஸார் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.
மேலும் இவர் கைது செய்யப்பட்டால் இதில் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டி, கடந்த 2015 செப்டம்பரில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அட்டாக் பாண்டி கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதை நீதிபதி ரத்து செய்தார். இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு மதுரை கிளை நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் இரண்டாவது முறையாக அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டது.