அக்னி வெயிலிலும் ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவிகள்.... மக்கள் ஆனந்த குளியல்
மேற்குத்தொடர்ச்சி பெய்யும் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. மக்கள் ஆனந்த குளியல் போடுகின்றனர்.
குற்றாலம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பிரதான அருவி, ஐந்தருவிகளில் கொட்டும் தண்ணீரில் கோடை விடுமுறையை கொண்டாட வந்துள்ள பயணிகள் ஆனந்த குளியல் போடுகின்றனர்.
குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியது. இதனால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நன்றாக மழை பெய்துள்ளது.
இடி மின்னலுடன் மழை
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் இடி,மின்னலோடு பலத்த மழை பெய்தது. மாலை 4.45 மணி முதல் வானம் கருத்து திடீர் இடி,மின்னலோடு பலத்த மழை பெய்தது.
அருவிகளில் தண்ணீர்
இதன் காரணமாக செங்கோட்டை, பண்பொழி, புளியரை, தென்காசி,குற்றாலம், ஐந்தருவி, உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த மழை காரணமாக குற்றாலம் மெயினருவி,ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரிப்போடு கொட்டுகிறது.
சுற்றுலா பயணிகள்
காலை முதல் குற்றாலம் மெயினருவியில் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்து உள்ளது. ஆண்களும், பெண்களும் பரவலாக விழும் அருவி நீரில் உற்சாகமாக குளித்து சென்ற வண்ணம் உள்ளனர்.
ஆனந்த குளியல்
அக்னி நட்சத்திரம் காலமான கோடை வெயில் கொளுத்தும் இந்த சமயம் அருவியில் தண்ணீர் கொட்டுவதால் கோடை விடுமுறையை கழிக்கும் பள்ளி குழந்தைகள் குற்றால அருவிகளில் ஆனந்தமாக நீராடி செல்கின்றார். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சீசன் விரைவில் தொடங்கும்
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க இன்னும் சில வாரங்கள் உள்ளது. முன்னதாகவே மழைக்காலம் தொடங்கினால் இந்த ஆண்டு குற்றால சீசனும் முன்னதாகவே தொடங்கும் என்றும் உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.